இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீளாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்காகப் போராடி வருகிறது.
இதேவேளையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற போதுமான நிதி நிலை மற்றும் வருவாய் ஈட்டும் கட்டமைப்பையும் மாற்றங்களையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு உள்ளது.
இதன் ஒருபகுதியாக அன்னிய செலாவணி இருப்பைக் காப்பாற்றும் விதமாக முக்கியத் தடையை விதித்துள்ளது இலங்கை அரசு.
அந்நிய செலாவணி பற்றாக்குறை
அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சாக்லேட், வாசனை திரவியங்கள் மற்றும் ஷாம்பூ என 300க்கும் அதிகமான நுகர்வோர் பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளது.
இலங்கை பொருளாதாரம்
இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இதுவரையில் பார்த்திடாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நாட்டின் மோசமான அந்நிய செலாவணி நெருக்கடியானது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குக் கூடப் பணம் இல்லாத மோசமான நிலைக்குத் தள்ளியது.
உணவு பொருட்கள் பற்றாக்குறை
இதுமட்டும் அல்லாமல் உணவு பொருட்கள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் அரிசி பருப்பு முதல் காய்கறி பழங்கள் வரையில் அனைத்தின் விலையும் தாறுமாறாக உயர துவங்கியது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடந்தினர். இதன் எதிரொலியாக இலங்கையில் ஆட்சி மாறியது.
சாக்லேட் தடை
இந்நிலையில் இலங்கை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சாக்லேட், வாசனை திரவியங்கள், ஒப்பனை மற்றும் ஷாம்பு உட்படப் பல நுகர்வோர் பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யத் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்தத் தடை அறிவிப்பில் சுமார் 300 பொருட்கள் அடங்கும்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ், உணவு முதல் இயந்திரங்கள் வரை நுகர்வோர் பொருட்களின் மீதான இறக்குமதித் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது இலங்கை அரசு. இதன் மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.