கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 120,000 க்கும் அதிகமான ஊழியர்களைப் பணியில் அமர்த்தி இருந்தது. இது மட்டும் அல்லாமல் இலங்கையின் 5 வது பெரிய ஏற்றுமதி வர்த்தகத்தைக் கொண்ட துறையாக இருந்தது.
இலங்கை ஐடி துறை வருடத்திற்கு 22 மில்லியன் டாலர் அளவிலான டாலர் வருமானத்தைப் பெற்று வந்தது. இதேபோல் அடுத்த 5 வருடத்தில் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி துறையாகவும், ஊழியர்கள் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்தும் பாதையில் இருந்தது.
ஆனால் தற்போது அத்தனையும் மொத்தமாக மாறியுள்ளது.
கோட்டாபய ராஜபக்சே
இலங்கை கோட்டாபய ராஜபக்ஷவின் அரசின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக 2022 துவக்கத்தில் இருந்து நிதி நெருக்கடி, அன்னிய செலாவணி கையிருப்புக் குறைப்பு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தது. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது.
இலங்கை ஐடி சேவை துறை
இதன் எதிரொலியாக இலங்கை ஐடி சேவை துறை சாதாரண வர்த்தகத்தை நடத்துவதற்குக் கூடக் கடினமாகிவிட்டதால், இத்துறையின் வளர்ச்சி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது மட்டும் அல்லாமல் 5 ஆண்டுக் கனவு திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டும் நிலை உருவாகியுள்ளது.
மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு
தினசரி நீண்ட நெடு நேரம் மின்வெட்டு, எரிபொருளுக்காகப் பல கிலோமீட்டர் வரிசையில் காத்திருக்கும் நிலை, மே மாதம் 39.1 பணவீக்கம் ஆகியவற்றில் இலங்கை வாடுகிறது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்களை வெளிநாட்டில் இருந்து வாங்குவதற்கான பணிகளை மட்டுமே செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஐடி துறை
ஐடி துறை இயங்குவதற்கு நிலையான மின்சார இணைப்பும், தடையில்லா இண்டர்நெட் இணைப்பும் கட்டாயம் தேவைப்படும் நிலையில் இலங்கை ஐடி துறை வாழ்வா சாவா போராட்டத்தில் உள்ளது.
தனித் தனிக் குழு
இலங்கை ஐடி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஊழியர்களைத் தனித் தனிக் குழுவாகப் பிரித்து மின்சாரம் இருக்கும் இடத்திற்குப் பெட்ரோல் இருக்கும் வரையில் பயணித்துத் தங்களது வாராந்திர மற்றும் மாதாந்திர டெலிவரிகளை வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து வருகின்றனர்.
போட்டி
இலங்கை ஐடி சேவை துறைக்கு இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம் எனப் பல போட்டி நாடுகள் இருக்கும் நிலையில், பல வருட முயற்சிகளுக்குப் பின்பு சமீப காலத்தில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் கைப்பற்றினர். ஆனால் இலங்கையின் வீழ்ச்சி ஐடி துறையின் பல வருட முயற்சிகள் வீணாகியுள்ளது.