இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 50 மில்லியன் டாலருக்கு குறைவாக மட்டுமே உள்ளது. இனி மக்களுக்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவது மற்றும் வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்துவது சிரமம் தான் என பாராளுமன்றத்தில் அந்நாட்டு நிதியமைச்சர் அலி சப்ரி சிவப்பு கொடியைத் தூக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு எடுத்த தவறான பொருளாதார நடவடிக்கையால், இலங்கை திவாலாகும் நிலையில் உள்ளது. சர்வதேச கடன்களும் பெற முடியாது சூழல் உள்ளது. உலக நாடுகளிடம் இருந்து பெற்ற கடனிற்கு இந்த ஆண்டு மட்டும் 8.6 பில்லியன் டாலர் நிலுவை தொகை செலுத்த வேண்டும். மொத்தமாக 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கடன் நிலுவையில் உள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு
பிப்ரவரி மாதம் 2.31 பில்லியன் டாலராக இருந்த இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் மாதம் 1.93 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. இரண்டு வருடத்தில் 70 சதவீத அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 50 மில்லியன் டாலர் தான் அந்நிய செலாவணி கையிருப்பு வைத்துள்ளது இலங்கை.
உலக வங்கி
இலங்கை அரசு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய 600 மில்லியன் டாலர் கடன் அளிப்பதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது. அதில் உடனடியாக 400 மில்லியன் டாலரை உலக வங்கி விரைவில் வழங்க உள்ளது. ஆனால் இலங்கை அரசுக்கு குறைந்தது 3 அல்லது 4 பில்லியன் டாலர் தேவை உள்ளது.
இந்தியா & சீனா
இலங்கை அரசு இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டதன் பெயரில் கடனுதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சீன அரசும் இலங்கைக்குக் கடன் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவுக்கு நன்றி
IMF உடனான பேச்சுவார்த்தையின் போது இந்தியா அளித்த ஆதரவிற்காக இன்று இலங்கை பாராளுமன்றத்தில் நன்றி தெரிவித்த அநாட்டின் நிதி அமைச்சர் சப்ரி, நிர்மலா சீதாராமனை தான் சந்தித்ததாகவும், அவர் இந்திய அரசு தங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.
IMF
IMF மற்றும் உலக நிதி அமைப்பின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உடனும் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி நிதி உதவி பெற முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு இந்திய அரசு 3 பில்லியன் டாலர் கடன் மற்றும் நிதியுதவிகளைச் செய்துள்ளது. திங்கட்கிழமை கூடுதலாக 200 மில்லியன் டாலர் அளிக்கவும் முன்வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை இந்திய அரசு கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு இப்போது அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளதால் இன்னும் ஓர் இரு நாட்களில் நிதி உதவி வரவில்லை என்றால் கண்டிப்பாக இலங்கை முழு திவால் நிலையை எட்டும் என கூறப்படுகிறது.
போராட்டம்
இலங்கையின் இந்த நிலைக்கு பொறுப்பேற்று கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என இலங்கையில் உள்ள மக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
நாட்டின் பொருளாதாரத்தைத் தவறாகக் கையாண்டதற்காக ராஜபக்சேவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அறிமுகப்படுத்திய ஒரு நாளில் சப்ரி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக இலங்கை திவாலாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.