உணவு பொருட்கள் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை, பல மணிநேரம் மின்சாரத் தடை, மக்கள் போராட்டம், அமைச்சர்கள் ராஜினாமா, பசியால் மக்கள் தவிப்பு, தமிழ்நாட்டுக்கு இடம்பெயரும் மக்கள் என இலங்கை பொருளாதாரம் கடந்த சில வாரத்தில் தரையைத் தட்டியது.
இந்நிலையில் இலங்கை அரசு இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இலங்கை அரசு
இலங்கை அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இறக்குமதிக்காக வைத்திருந்த அன்னிய செலாவணி இருப்பு வேகமாகக் குறைந்துள்ள நிலையில், அரசு வாங்கிய 51 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பிச் செலுத்த முடியாது என அறிவித்துள்ளது. இதுதான் எங்களுடைய கடைசி நிலை என்றும் அறிவித்துள்ளது.
51 பில்லியன் டாலர் கடன்
இதுகுறித்து இலங்கை அரசின் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்னிய செலாவணி இருப்பு வேகமாகக் குறைந்து வரும் நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.
இலங்கை நிதியமைச்சகம்
மேலும் இலங்கைக்குக் கடன் கொடுத்த அமைப்புகள், வெளிநாட்டு அரசுகள் கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை மூலதனமாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இல்லையெனில் இலங்கை ரூபாயில் பேமெண்ட் செய்யும் முறையை ஏற்றுக்கொள்ளும் படி தெரிவித்துள்ளது இலங்கை நிதியமைச்சகம்.
அவசரக்கால நடவடிக்கை
இலங்கையின் நிதி நிலை மேலும் மோசமாவதைத் தடுக்கும் பொருட்டு அரசு அவசரக்கால நடவடிக்கையாகக் கடைசி முயற்சியாக மட்டுமே இத்தகைய முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
இலங்கை அரசு தனது நிதிநிலையைச் சீர்படுத்தச் சர்வதேச நாணய நிதியத்திடம் புதிய கடன் திட்டத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே இருக்கும் கடனுக்கும், கடன் வாங்கியவர்களுக்கும் எவ்விதமான தளர்வும் இல்லாமல் நிலையான நிலைப்பாட்டைக் கொண்டு இருப்பதைக் காட்டும் விதமாகத் தற்போது 51 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என அறிவித்துள்ளது.
இலங்கை சுதந்திரம்
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பும், இப்போதும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் ஆண், பெண் வித்தியாசமின்றி இலங்கை மக்கள் தற்போது அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மக்களைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் தோல்வியைச் சந்தித்து வருகிறது.
சர்வதேச ரேட்டிங் அமைப்புகள்
ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரத் தரத்தைச் சர்வதேச ரேட்டிங் அமைப்புகள் மோசமான மதிப்பீட்டைக் கொடுத்துள்ளது. இதனால் கடன் பெறுவதற்கான வாய்ப்பு இழந்துள்ள இலங்கை கடைசி வாய்ப்பாக IMF அமைப்பின் கடன் திட்டத்தை நம்பியிருக்கிறது.
இந்தியா மற்றும் சீனா
இலங்கை தற்போது எரிபொருள், உணவு பொருட்கள் தேவையை இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. முதலில் இரு நாடுகளிடமும் பணத்தைத் தான் கடனாகக் கேட்டது, இந்தியா, சீனா மறுத்துவிட்ட நிலையில் பொருட்களின் வாயிலாக உதவி வருகிறது.
மகிந்த ராஜபக்ச
இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச மக்களிடம் பேசுகையில் பொருளாதார நிலைமையை அரசு விரைவில் தீர்க்கும் அதுவரையில் பொறுமை காக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். "நீங்கள் சாலையில் போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நொடியும் பல டாலர்கள் நஷ்டத்தை நாம் எதிர்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
வீழ்ச்சிக்கு என்ன காரணம்..?
இலங்கையில் இந்த மோசமான நிலைக்கு அந்நாட்டின் அரசின் முறையற்ற நிர்வாகம், தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் அளவு, வரிக் குறைப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.