இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தொடர்ந்து பொருளாதாரச் சரிவு, வர்த்தகச் சரிவில் இருக்கும் வேளையில் அந்நாட்டில் அமைந்திருக்கும் புதிய அரசு வருவாய் ஈட்டும் முயற்சியில் பல அரசு சேவை மற்றும் அரசு நிர்ணயம் செய்யும் பல பொருட்களின் விலையை அதிகரித்து வருகிறது.
இதன் வாயிலாக இலங்கையில் மின் கட்டணத்தை 75 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கையின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பொது மற்றும் பிற பங்குதாரர்களின் கருத்துக்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு நியாயமான மின்சாரக் கட்டணத்தை அங்கீகரிக்க ஆணைக்குழு முடிவு செய்தது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரதநாயக்க இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம்
அனைத்து பிரிவினருக்கும் சராசரியாக 75 சதவீதம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார ஆணையத்திற்கு (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. PUCSL தரவுகள் படி 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு 75% மின் கட்டண உயர்வு என்பது இதுதான் முதல் முறையாகும்.
PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க
மின் கட்டண அதிகரிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று இலங்கை நாட்டின் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வருமானம், வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் மக்களிடத்தில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது இலங்கை மக்களுக்குப் பெரும் சமையை ஏற்படுத்தியுள்ளது.
0- 30 யூனிட்
இன்றைய அறிவிப்பில் மூலம் இலங்கையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 0- 30 யூனிட்டுகள் நுகர்வோருக்கு 264% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க CEBக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச கட்டணம் ரூ.198 ஆக இருக்கும் எனத் தெரிகிறது.
பிற கட்டண உயர்வு
ஜனக ரத்நாயக்க தொடர்ந்து கூறுகையில், 31 முதல் 60 அலகுகளைக் கொண்ட நுகர்வோரின் பில்கள் 211% அதிகரித்து அதிகபட்சமாக 599 ரூபாயும், 61- 90 யூனிட் நுகர்வோரின் மின் கட்டணம் 125 சதவீதம் அதிகரிக்கவும், 91- 120 யூனிட் நுகர்வோரின் மின் கட்டணம் 89 சதவீதம் அதிகரிக்கப்படும் எனவும், 121 முதல் 180 யூனிட் நுகர்வோரின் மின் கட்டணம் 79% அதிகரிக்கப்படும் என PUCSL தலைவர் தெரிவித்துள்ளார்.
டாலரில் பேமெண்ட்
மேலும் தொழிற்துறை, ஹோட்டல் மற்றும் நுகர்வோர் பிரிவில் 60% க்கும் அதிகமான வருமானத்தை வெளிநாட்டு நாணயத்தில் ஈட்டுபவர்கள், அமெரிக்க டாலர்களில் (USD) மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வரும் நுகர்வோருக்கு அவர்களின் மின்சாரப் பில்களில் 1.5% தள்ளுபடி வழங்கப்படும், இந்தத் திட்டம் செப்டம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வர உள்ளது.
ஹோட்டல்
ஆகஸ்ட் 10, 2022 முதல் ஹோட்டல் வகை நுகர்வோருக்கு கட்டண உயர்வில் 50% வசூலிக்கப்படும், மீதமுள்ள 50% நவம்பர் 10, 2022 முதல் அமலுக்கு வரும் எனவும் இன்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.