இலங்கையில் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்து மக்களின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது. ஆனால் இலங்கை அரசின் கையில் ஏற்கனவே பணம் இல்லாத காரணத்தால், விலைவாசி உடனடியாகக் குறைய வாய்ப்பு இல்லை.
இதேபோல் இலங்கையிடம் வெறும் 50 மில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணியும், 50 பில்லியன் டாலர் அளவிலான கடன் சுமையும் உள்ளது.
கடன் சுமையால் வீழ்ச்சி அடைந்துள்ள முதல் நாடு இலங்கையாக இருக்கும் நிலையில் பல நாடுகள் அடுத்தடுத்து வீழும் என ஐநா, உலக வங்கி தனது கணிப்புகள் மூலம் எச்சரித்துள்ளது.
மும்முனை நெருக்கடி
உலகெங்கிலும், கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மும்முனை நெருக்கடியுடன் போராடி வருகின்றன: கொரோனா தொற்று மற்றும் அதன் பொருளாதார வர்த்தகப் பாதிப்புகள்; தொடர்ந்து அதிகரித்து வரும் கடன்; ரஷ்யாவின் போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு.
உலக வங்கி
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில் தற்போது வளரும் நாடுகள் பற்றித் தான் அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. எரிசக்தி, உரம் மற்றும் உணவுக்கான திடீர் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதம் அதிகரிப்பு ஆகியவை வளரும் நாடுகளில் இருக்கும் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகத் தாக்குகிறது. எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா
ஐ.நா-வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவான UNCTAD, சமீபத்திய அறிக்கையில் 107 நாடுகள் குறைந்தபட்சம் மூன்று அதிர்ச்சிகளில் ஒன்றை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. மூன்று பாதிப்புகளையும் சுமார் 69 நாடுகள் எதிர்கொண்டு வருகிறது. இதில் ஆப்பிரிக்காவில் 25, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 25, மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளில் 19 உள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.
முக்கிய நாடுகள்
தற்போது ஐஎம்எப் இலங்கையைப் போலவே துருக்கி, எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், கானா, கென்யா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா. அர்ஜென்டினா, எல் சால்வடார், பெரு ஆகிய நாடுகள் உடன் நிதியுதவிக்காகவும், புதிய கடனுக்காகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முதல் நாடு
இதனால் கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது, இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்பதை உலக வங்கி, ஐநா, ஐஎம்எப் தரவுகள் வாயிலாகத் தெரிகிறது.
இந்தியா
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா பொருளாதாரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் முதலீட்டாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் தங்கள் பணத்தை மிகவும் பாதுகாப்பான துறையில் முதலீடு செய்வது முக்கியமானதாக விளங்குகிறது.