நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன் வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதனை அடுத்து மத்திய கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகலை அறிவித்ததை அடுத்து பிரபல ஐடி நிறுவனமான Zoho நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு, தர்மேந்திர பிரதானின் சேவையை பாராட்டி பதிவு செய்திருந்தார். எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஸ்ரீதர் வேம்பு "திரு தர்மேந்திர பிரதான் எனக்கு தெரிந்து மிக நேர்த்தியான ஒரு பொது சேவகர். இந்த நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். கிராமப்புற மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து பல முறை நாங்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். அவர் ராஜினாமா செய்வதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. உங்களின் சேவைக்கு நன்றி" என கூறியிருந்தார்.

ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவுக்கு சிலர் கடும் விமர்சனம் தெரிவித்தனர். அதாவது ஸ்ரீதர் வேம்பு தர்மேந்திர பிரதானை ஆதரித்துப் பதிவிட்டதற்கு பின்னால், சோஹோ நிறுவனத்தின் வணிக நலன்கள் இருப்பதாக சிலர் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு பதிலளித்து ஸ்ரீதர் வேம்பு, மற்றொரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், சோஹோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் இந்தியாவுக்கு வெளியிலிருந்து தான் கிடைக்கிறது என கூறியுள்ளார். உலகளாவிய கடுமையான போட்டிக்கு மத்தியிலும் தனது நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து தான் 90% வருவாயை ஈட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நிறுவனத்தின் மொத்த வருவாயில் இந்திய அரசாங்கத்திடமிருந்து வரும் ஒப்பந்தங்களின் பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே என கூறியுள்ள அவர் அரசுடன் இணைந்து செயல்படும்போது, வரி செலுத்தும் சாமானிய மக்களின் பணத்தை சேமிப்பதையே நாங்கள் எப்போதும் முன்னுரிமையாக கருதுகிறோம், மேலும் நாட்டில் அதிகமாக வரி செலுத்தும் நிறுவனங்களின் சோஹோவும் ஒன்று என்பதில் பெரிமிதம் கொள்கிறோம் என கூறியுள்ளார்.
நான் இதுவரை எந்தவொரு அரசாங்கத்திடமும் எந்த சலுகையும் கேட்டதும் இல்லை, இனி கேட்க போவதும் இல்லை என கூறியுள்ள அவர், அரசியல் சார்பின்றி தான் ஆலோசனைகளை வழங்குவதாகவும், கேரளாவில் இடது முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது, தகுந்த ஆலோசனைகள் மூலம் அங்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை உருவாக்க உதவியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மேற்கொண்டு வரும் நல்ல முன்னெடுப்புகளை தான் ஆதரிப்பதாக கூறும் அவர், இது அரசியல் காரணங்களுக்காக அல்ல, மாநிலத்தில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே என கூறியுள்ளார். விமர்சனங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு பணியப்போவதில்லை என்றும், நாட்டின் நலனை முன்வைத்து தனது கருத்துக்களை தொடர்ந்து தெரிவிப்பேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனங்கள் தங்களை மேலும் வலுப்படுத்துமே தவிர, பின்வாங்க செய்யாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

