தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்கள் தேவை. அது இல்லாமல் தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த சூழலில், காங்கிரஸ் திடீரென திமுக கூட்டணியை உடைத்து கொண்டு தவெகவுடன் கூட்டணி வைத்தது. இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்கள் கிடைக்கவில்லை. இந்த சூழலில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு தரலாம் என அதிமுகவில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என தகவல் வெளியானது. இதனையொட்டி, அதிமுக. எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருந்தது. ஆனால் திடீரென இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, அதிமுக பெரிய இயக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், திமுக மற்றும் அதிமுக இடையே உயர்மட்ட அளவில் உடன்பாடு ஏற்பட்டு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தயாராகி வருவதாக நேற்று மாலை ஒரு தகவல் பரவி தமிழகம் முழுவதும் பேசு பொருளானது. தற்போது திமுகவுக்கு 68 இடங்களும், அதிமுகவுக்கு 53 இடங்களும் உள்ளன. இந்த கட்சிகள் இணைந்தால் மொத்த எண்ணிக்கை 121 ஆக இருக்கும். பெரும்பான்மையாக ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும். அந்த வகையில், போதிய அளவிலான இடங்களை இந்த கூட்டணி கொண்டிருக்கும். சமூக வலைதளங்கள் எங்கும் அதிமுக , திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது தான் டிரெண்டானது.
இந்நிலையில் காபந்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் , தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது என கூறியுள்ளார். இதன் மூலம் திமுக , அதிமுக கூட்டணி என்ற வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விஜய் ஆட்சிக்கு ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தொடர்ந்து கவனிப்போம், திமுக அரசின் திட்டங்களை தவெக தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறேன், மகளிருக்கு மாதம் ரூ.2,500 அளிப்பது கடினம்; திமுக அரசு வழங்கியது போன்று மாதம் ரூ.1,000ஆவது வழங்க வேண்டும் என கேட்டு கொண்டிருக்கிறார்.
உடனடியாக தேர்தல் வருவதையோ அரசமைப்பு குழப்பம் ஏற்படுவதையோ திமுக விரும்பவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்கட்சியாக திமுக செயல்படும் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் 108 இடங்களில் விஜய் ஒரு இடத்தை ராஜினாமா செய்வார், அதே போல ஒருவர் சபாநாயகர் ஆகிவிடுவார், அந்த வகையில் விஜய்க்கு இருப்பது 106 எம்எல்ஏக்கள் மட்டுமே , காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளதால் 111ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 7 பேரின் ஆதரவு விஜய்க்கு தேவை.


Click it and Unblock the Notifications

