தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட கூடிய வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றோடு சேர்ந்து 3000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகைக்கு டோக்கன் விநியோகம் செய்யக்கூடிய பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளைய தினம் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது . முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பையும் பொங்கல் பரிசு தொகையையும் வழங்குகிறார்.

சென்னை ஆலந்தூர் ரேஷன் கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பல்வேறு மாவட்டங்களிலும் இதனை அடுத்து பொங்கல் பரிசு தொகை வழங்கும் பணிகள் தொடங்கும். முதல் நாளில் மட்டும் காலை , மதியம் என மொத்தம் 200 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என்பது வழங்கப்படும். வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு நாளைக்கு 300 பேர் வரை பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் பணிகள் நடைபெறும்.
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க ஏதுவாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து கடைகளுக்கும் பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்கான சுற்றறிக்கையும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக பணத்தை கவரில் போட்டு கொடுக்க கூடாது, கைகளில் எடுத்து பயனாளியின் முன்னிலையிலேயே எண்ணி வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே டோக்கன் பெற்ற மக்கள் உரிய நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதுவரை டோக்கன் கடைக்கவில்லை என்றால் ரேஷன் கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு டோக்கனை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கக்கூடிய குடும்பத்தினர் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகையாக 3000 ரூபாய் ரொக்க பணத்தை பெற இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்டதிலேயே இது தான் அதிகபட்ச பொங்கல் பரிசு தொகை ஆகும். இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார்.


Click it and Unblock the Notifications