இந்திய அரசியலிலும் , இந்திய பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டை ஆட்சி செய்ய போவது யார் என்பதை தீர்மானிக்கும் முடிவுகள் நாளை மறுதினம் வெளியாக இருக்கின்றன.
234 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் மொத்தம் 85% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை மறுதினம் அதாவது மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்குமுனை போட்டி நிலவும் நிலையில் இந்த சட்டமன்றத் தேர்தல் பல சுவாரசியங்கள் நிறைந்ததாக இருக்கிறது. 4000க்கும் அதிகமான வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் கண்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளராக இந்த தேர்தலில் களம் காண்கின்றனர்.
வாக்குப்பதிவு முடிந்த ஏப்ரல் 23ஆம் தேதியே அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரும் இவற்றை தீவிரமாக கண்கானித்து வருகின்றனர். இதற்கிடையே தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகமாக மதுரையில் 5 மையங்களும், கடலூர், சேலத்தில் தலா 5 வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன, சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையம் உள்ளது. வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு விட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக திமுக கூட்டணி அதிமுக கூட்டணிக்கு இடையில் தான் பலத்த போட்டி இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு போட்டியாக உருவெடுத்து இருக்கிறது. இதனால் தான் இந்த சட்டமன்றத் தேர்தல் பெரிய அளவில் கணிக்க முடியாத ஒரு தேர்தல் ஆகவும் மாறி இருக்கிறது.
விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால் பரபரப்பு இன்னமும் கூடியிருக்கிறது. மக்கள் பாரம்பரிய திராவிட கட்சிகளையே தேர்வு செய்கிறார்களா, புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு தருகிறார்களா என்பதற்கெல்லாம் திங்கட்கிழமை அன்று முடிவு தெரிந்துவிடும். அந்த வகையில் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாக மே நான்காம் தேதி இருக்க போவது உறுதி. பலரது அரசியல் வாழ்க்கையையும் புரட்டி போடும் ஒரு நாளாகவும் இந்த நாள் நிச்சயம் இருக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

