ஓடிடி மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்கள் தியேட்டர்களுக்கு வந்து சினிமா பார்ப்பதை படிப்படியாக குறைத்து வருகிறது. ஏற்கனவே சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுடைய வருவாய் குறைந்து விட்டதாக வேதனைப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் திரையுலகில் படம் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக ஒரு மிகப்பெரிய மோசடி நடத்தப்படுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது எனும்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதில் இத்தனை பேர் டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கிறார்கள் என்ற சதவீத அடிப்படையில் காட்டும். அதை பொறுத்து இந்த படத்திற்கு இவ்வளவு டிமாண்ட் இருக்கிறது அப்படி என்றால் இதற்கு போகலாம் என்ற முடிவினை மக்கள் எடுப்பார்கள். இவ்வாறு ஆன்லைன் செயலிகளில் குறிப்பிட்ட படத்திற்கு இத்தனை பேர் டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கிறார்கள் என்பதே போலியாக உருவாக்கப்படும் ஒரு பிம்பம் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் முன்னணி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில் இதற்கு முன்பு பாலிவுட் சினிமாவில் தான் பிளாக் புக்கிங் , பல்க் புக்கிங், ஃபேக் புக்கிங் என்பது நடந்து வந்தது. தற்போது தமிழ் சினிமாவிலும் அது நுழைந்து விட்டது என கூறுகிறார். அதாவது ஹிந்தி திரையுலகத்தில் பாக்ஸ் ஆபிஸ் வருமானத்தை அதிகரிப்பதற்காக கார்ப்பரேட் புக்கிங், பல்க் புக்கிங், ஃபேக் புக்கிங் என்பதை நடத்துவார்கள்.
அதாவது படத் தயாரிப்பு நிறுவனம் அல்லது படத்தில் நடித்துள்ள நடிகர்கள் சார்பாக பல்லாயிரம் டிக்கெட்களை புக்கிங் செய்வார்கள். இதனால் புக் மை ஷோ போன்ற தளங்களில் குறிப்பிட்ட அந்த படம் ட்ரெண்டிங்கில் இருப்பதாக காட்டும். எனவே அதை பார்த்து அனைவரும் இந்த திரைப்படம் நன்றாக ஓடுகிறது பலரும் இதற்கு செல்கிறார்கள் நாமும் டிக்கெட் பதிவு செய்து போய் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது என கூறுகிறார்.
இந்த பிளாக் புக்கிங் தற்போது தமிழ் திரையுலகிலும் நுழைந்திருப்பதாக கூறுகிறார். அதாவது புக் மை ஷோ போன்ற தளங்களில் ஒரே சமயத்தில் 4000 டிக்கெட்டுகளை நீங்கள் புக் செய்து விட்டால் அந்த செயலியில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய படமாக அந்த படம் காட்டும் எனக் கூறுகிறார். பெரிய பெரிய நடிகர்களே தற்போது தங்களுடைய படம் ரிலீஸ் ஆகும் போது 10 கோடி ரூபாய் செலவு செய்து முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள் என கூறுகிறார்.
இவ்வாறு அவர்கள் டிக்கெட் வாங்கும் போது ஏராளமானவர்கள் அந்த படத்தை காண ஆர்வம் காட்டுவதாக ஒரு பிம்பம் வரும். எனவே மக்கள் அந்த படத்திற்கு அதிகம் டிக்கெடு பதிவு செய்து படத்தை பார்ப்பார்கள் என்கிறார். ஒரு திரைப்படம் 100 கோடி ரூபாய் கடந்து வசூல் சாதனை படைக்கிறது என்றால் 70 கோடி ரூபாய் தான் உண்மையான வருமானம் 30 கோடி ரூபாய் இது போன்ற ஃபேக் புக்கிங் என கூறுகிறார். இந்த போக்கு காரணமாக சிறிய பட்ஜெட் படங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது என அவர் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில் சுட்டிக்காட்டுகிறார்.
தங்களுக்கு மார்க்கெட் குறையவில்லை என்பதை காட்டவும் அடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த்தவும் இந்த உத்தி கையாளப்படுவதாக சொல்லப்படுகிறது. பெரிய நடிகர்களே காசு கொடுத்து தியேட்டரை நிரப்பும் போது, தியேட்டர் உரிமையாளர்கள் சிறு தயாரிப்பாளர்களிடமும் இதையே எதிர்பார்க்கிறார்கள். உங்கள் படத்திற்கு 100 டிக்கெட்டுகளை நீங்களே வாங்கினால் தான் படத்தை திரையிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் கவலை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

