இந்தியப் பங்குச்சந்தையைத் தற்போது சரிவில் இருந்து காப்பாற்றி வரும் ஒரு முக்கியமான முதலீட்டு ஆதாரம் என்றால் அது கட்டாயம் ஐபிஓ தான். 2020 காலகட்டத்தில் இந்தியாவில் வர்த்தகம் செய்து வந்த சில முன்னணி ஐடி மற்றும் உணவு சேவை நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு வெற்றிகண்டது.
இதன் பின்பு முன்னணி நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை ஈட்டியது. இப்படியிருக்கையில் இந்திய ஸ்டார்ட்அப் அடுத்தடுத்து ஐபிஓ மூலம் பெரும் முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டுச் செபி-யிடம் விண்ணப்பம் சமர்ப்பித்து வருகிறது.
ஆனால் இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும்பாலானவை நஷ்டத்தில் இயங்குபவை, இதனால் இதில் முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..? என்பதை முடிவு செய்வதில் பெரும் குழப்பம் உள்ளது. இதுகுறித்து சமுக வலைத்தளத்தில் ஒரு பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. அதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
எல்ஐசி நிறுவனம்
எல்.ஐ.சி. போன்ற பெருநிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட ஐ.பி.ஓ விடுகிறது. இதை எதிர்பார்த்து விண்ணப்பிப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. நிறுவனம் எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது.. எப்படி இயங்குகிறது.. என்ன செய்கிறது.. என எல்லாம் உங்களுக்குத் தெரியும். தெரியவில்லையென்றாலும் தேடித் தெரிந்துகொள்ளலாம். அவ்வளவு விவரமும் ஆண்டறிக்கைகளும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
ப்ரீமியம் விலை செல்லாது
எல்.ஐ.சி.யே ஆனாலும் அதன் மதிப்பைக் காட்டிலும் 20, 30 விழுக்காட்டுக்கு ப்ரீமியம் வைத்து விற்றால் விண்ணப்பிக்காமல் விடுதல் நலம். எங்குப் போய்விடும். ஒரு கரக்ஷன் வந்தால் அள்ளிக்கொள்ளலாம்.
எல்.ஐ.சி.க்கே இப்படியென்றால், தொடங்கிச் சில ஆண்டுகளே ஆன நிறுவனங்களின் ஐ.பி.ஓ.வை நீங்கள் எப்படி அணுக வேண்டும்?
ஸ்விக்கி, உபர், ஓலா நிறுவனங்கள்
ஸ்விக்கி, உபர், ஓலா எல்லாம் இப்போதுவரை நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள். அவைகளின் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் சீனாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் மொரீஷியஸில் பதிந்த காகித நிறுவனங்கள் வழியில் பல்லாயிரம் கோடிப் பணத்தை இறைத்து சாதாரண நிறுவனத்தைப் பெரிய நிறுவனமாக்கியுள்ளனர்.
சாமானிய முதலீட்டாளர்கள்
அப்படி ஒரு சூழலில் ஐ.பி.ஓ விடுகிறார்கள். நம்மவர்கள் ஏழுமலையானைக் காண சன்னதிக்குள்ளேயே ஹெலிகாப்டரில் கொண்டு இறக்கிவிட்டதைப்போல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டதும், இதுதான்டா தருணமென்று ஒரு லாட்டாவது கிடைக்காதா என்று தேவுடு காப்பார்கள்.
முதலாளிகள் திட்டம் இதுதான்
ஐ.பி.ஓ. draft red herring prospectus (DRHP)ஐ திறந்தாவது பார்த்திருப்பார்களா தெரியாது. அதில் பார்த்திருந்தால் புரிந்திருக்கும். இத்தகைய பங்குகளின் ஐ.பி.ஓ.வின் போது புதிய பங்குகளை விற்பதைக் காட்டிலும், முதலாளிகள், ஏற்கெனவே இருக்கும் தங்கள் பங்குகளை விற்பதே முக்கிய நோக்கமாயிருக்கிறது என்று.
இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்கள்
இன்போஸிஸ் இல்லையா, டி.சி.எஸ் இல்லையா, அதை அப்படி வாங்கித்தானே கோடிகளில் சம்பாதித்தார்கள் என்று ஒரு கூட்டம் வரும். டி.சி.எஸ்., இன்போஸிஸ் எல்லாம் லாபத்தில் நடந்த நிறுவனங்கள். அவற்றின் ஐ.பி.ஓ. வேறு கதை. அப்படியே இருந்தாலும் அதிக ப்ரீமியத்தில் வாங்காமல் இருப்பது எத்தகைய நிறுவனமாயிருந்தாலும் பொருந்தும்.
ஐபிஓ DRHP அறிக்கை
ஐ.பி.ஓ.வுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். அதற்குமுன் அவர்களின் draft red herring prospectus (DRHP)ஐ ஒரு முறை வாசியுங்கள். நிறுவனம் லாபத்தில் இயங்குகிறதா, எவ்வளவு கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள், எவ்வளவு கடன் வைத்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் கவனியுங்கள். பின் முடிவெடுங்கள். ஐ.பி.ஓ என்பது பங்குச்சந்தையின் தொடக்கம் மட்டுமே, முடிவில்லை. இப்படி முடிகிறது இந்தப் பதிவு.
சோமேட்டோ ஐபிஓ எப்படி
இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பங்குகள் நிலை என்ன. 72 முதல் 76 ரூபாய் விலையில் பங்குகளை விற்பனை செய்யப்பட்ட சோமேட்டோ பங்குகள் 115 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டது.
சோமேட்டோ பங்குகளின் நிலை
முதல் நாள் வர்த்தகத்திலேயே 140 ரூபாய் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களைக் குளிர்வித்தது. ஆனால் அடுத்தச் சில நாட்களில் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தை சந்தித்து 147.80 ரூபாய் என்ற உயர்வையும் தொட்டது. ஆனால் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் தற்போது ஒரு பங்கு விலை 124.95 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது. சோமேட்டோ ஒரு நிலையற்ற தன்மையைப் பதிவு செய்கிறது.