உலக நாடுகளில் கொரோனா தாக்கம் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதன் காரணமாக இந்தியா உட்படப் பல்வேறு நாடுகள் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்கும் நோக்கில் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது.
ஆனால் மக்கள் கையில் போதிய பணம் இல்லாத காரணத்தால் அடுத்த சில மாதங்களுக்கு வர்த்தகச் சந்தை மந்தமாகத் தான் இருக்கும் எனப் பலதரப்பட்ட ஆய்வுகள் கூறுகிறது.
இதுவரை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே அதிகளவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்து வந்த நிலையில், தற்போது பெரு நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
கொரோனா 2.0
மறுபக்கம் சீனா மற்றும் தென் கொரியா நாடுகளில் புதிதாகச் சிலருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இன்னும் சில நாடுகளில் ஏற்கனவே குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்து வருகிறது. லாக்டவுனில் 1.0, 2.0, 3.0, 4.0 எனச் சொல்வது போல் தற்போது கொரோனா 2.0 வந்துள்ளதா என அச்சம் நிலவி வருகிறது.
இது தொடர்ந்தால் கொரோனா-வை தாண்டி வறுமை என்னும் பெரிய பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உபர்
உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபர், கொரோனா தொற்றின் காரணமாக மிகவும் குறைவான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 3000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த மாதம் சுமார் 3,700 பேரை பணிநீக்கம் செய்த உபர் கொரோனா 2.0 எதிரொலியின் காரணமாகத் தற்போது 3,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
45 அலுவலகங்கள்
இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் அலுவலகங்களில் 45-ஐ மூடியும், சிலவற்றை வேறு வர்த்தகத்துடனும் இணைத்துள்ளது. இதன் மூலம் இனி வரும் வாரத்திலும் உபர் அதிகளவிலான பணிநீக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீவொர்க் (WeWork)
இதேபோல் அலுவலக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த WeWork, தனது இந்திய வர்த்தகத்தில் இருந்து சுமார் 20 சதவீத ஊழியர்கள் அதாவது 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
வர்த்தகத்தில் செலவுகளைக் குறைப்பதற்காக இந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது எனக் காரணமாகத் தெரிவித்துள்ளது வீவொர்க் நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் எம்பசி குரூப்.
ஸ்விக்கி
உணவு டெலிவரியில் முன்னோடியாக இருக்கும் சோமேட்டோ சில நாட்களுக்கு முன்பு 520 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி 1100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும் ஸ்விக்கி அடுத்த 18 மாதங்களுக்கு வர்த்தகத்தைக் குறைக்கவும், மோசமாகச் செயல்படும் வர்த்தகத்தை மூடவும் திட்டமிட்டுள்ளது, இதனால் இக்காலகட்டத்தில் ஸ்விக்கி நிறுவனம் அடுத்த 18 மாதங்களுக்கு நிலையற்ற தன்மையில் தான் இருக்கும்.
இந்தியா
இந்தியாவில் வர்த்தகப் போட்டியின் காரணமாக அதிகளவிலான பணத்தை முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் ஏறத்தாழ அடுத்த சில மாதங்களில் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதில் அதிகப் பணம் பலம் படைத்த நிறுவனங்களும் அடக்கம்.
பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம்
மே 12 ஆம் தேதி துவங்கி 5 நாட்கள் படிப்படியாக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இந்த 5 நாட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நம்பிக்கையும் (silver bullets) காணப்படவில்லை எனக் குளோபல் முதலீட்டு வங்கியான நோமுரா மே 17ஆம் தேதி அறிவித்துள்ளது.
மத்திய அரசு தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறுகிய கால வளர்ச்சி திட்டங்களாக இல்லை. இதனால் 2020 மார்ச் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் மேசமான நிலையைச் சந்திக்கும். இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதம் வரையில் குறையும் என்று அமெரிக்க முதலீட்டுச் சந்தை நிறுவனமான கோல்டுமேன் சாச்சீஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.