இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அனைத்து கடன்களுக்குமான வட்டியை உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கி முடிவால் புதிதாகக் கடன் வாங்குபவர்கள் மட்டும் அல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் வட்டி விகிதம் உயர உள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் கூடுதலான வட்டியை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எவ்வளவு வட்டியை உயர்த்தியுள்ளது தெரியுமா..?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது பென்ச்மார்க் ப்ரைம் லென்டிங் ரேட் (BPLR) விகிதத்தை 70 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 13.45 சதவீதமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை எஸ்பிஐ தனது இணையத் தளத்திலும் வெளியிட்டுள்ளது.
BPLR விகிதம்
இதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் BPLR விகித அடிப்படையில் பெற்ற கடனுக்கான ஈஎம்ஐ அதிகரிக்கும். BPLR-ன் பழைய வட்டி விகிதம் 12.75 சதவீதமாக உள்ளது, இது ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட வட்டி விகிதம்.
பேஸ் ரேட்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா BPLR விகிதத்தைப் போலவே பேஸ் ரேட் விகிதத்தையும் 0.7 சதவீதம் அதிகரித்து 8.7 சதவீதமாக அறிவித்து வியாழக்கிழமை முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
பழைய விகிதம்
வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான பழைய அளவுகோல்கள் இவை. இப்போது பெரும்பாலான வங்கிகள் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதம் (EBLR) அல்லது Repo-Linked Lending Rate (RLLR) அடிப்படையில் கடன்களை வழங்குகின்றன.
மற்ற வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா BPLR மற்றும் அடிப்படை விகிதம் இரண்டையும் காலாண்டு அடிப்படையில் மாற்றுகிறது. எஸ்பிஐ அறிவிப்பைத் தொடர்ந்து கடனுக்கான வட்டி விகிதம் வரும் நாட்களில் மற்ற வங்கிகளிலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாணய கொள்கை கூட்டம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நாணய கொள்கைக் கூட்டத்திற்குச் சில வாரங்களுக்கு முன்னதாகவே பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை அதிகரித்துள்ளது. ஆர்பிஐ பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-ன் முடிவுகளின் தாக்கத்தைச் சரி செய்யவும் 35- 50 அடிப்படை புள்ளிகளை ரெப்போ விகிதத்தை உயர்த்த உள்ளது.