இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்விதமான முன் திட்டமிடல் இல்லாமல் தடாலடியாகப் பணமதிப்பிழப்பை அறிவித்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முழுமையாக முடிந்தும் மத்திய அரசால் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நோக்கத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே உண்மை.
பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு மூலம் கருப்புப் பணத்தை அழித்து டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் இதன் மூலம் மக்கள் பணத்தைப் பயன்படுத்தாமல் அமெரிக்கா, பிரிட்டன் போல டிஜிட்டல் பேமெண்ட் முறையைப் பெரிய அளவில் பயன்படுத்துவார்கள் எனக் கணிக்கப்பட்டது.
டிஜிட்டல் பேமெண்ட்
ஆனால் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் டிஜிட்டல் பேமெண்ட்-க்கான போதுமான தளம் இந்தியாவில் இல்லாத காரணத்தால் மக்கள் மீண்டும் பணத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவானது. இதில் கொரோனா தொற்றுக் காலத்தில் பல இடங்களில் பணத்தின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்தது.
நாணய புழக்கத்தில் பணத்தின் அளவு
இதன் எதிரொலியாக 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்த நாணய புழக்கத்தில் பணத்தின் அளவு ஜிடிபி-யில் 14.5 சதவீத அளவாக இருக்கிறது. 2017ஆம் நிதியாண்டில் வெறும் 8.2 சதவீதமாக இருந்த நிலையில் 10.7 சதவீதம், 11.3 சதவீதம், 12.0 சதவீதம், 14.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் ஏற்கனவே கடந்த ஆண்டு அளவீட்டை அடைந்துள்ள நிலையில் 16 சதவீதம் அளவீட்டை எட்டலாம்.
டிஜிட்டல் பேமெண்ட் சேவை
இதேவேளையில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மறுக்க முடியாது. UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பாஸ்டேக் எனப் பலவற்றில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் இணைக்கப்பட்டு டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பணத்தில் ஆதிக்கத்தைக் குறைக்க முடியவில்லை என்பதே தற்போதைய பிரச்சனை.
உலக நாடுகள்
கொரோனா தொற்றுக்குப் பின்பு நாணய புழக்கத்தின் பணத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது இந்தியாவில் மட்டுமில்லை. அமெரிக்கா, ஸ்பையின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், ரஷ்யா மற்றும் டர்கி ஆகிய நாடுகளிலும் இதே நிலை தான்.