மெட்டல்ஸ் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக இந்திய சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இன்றும் சென்செக்ஸ் 323.34 புள்ளிகள் குறைந்து, 58,340.99 புள்ளிகளாகவும்., இதே நிஃப்டி 88.30 புள்ளிகள் குறைந்து, 17,415.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் இன்று விப்ரோ, ஏர்டெல், வேதாந்தா, கோல் இந்தியா, ஜீ எண்டர்டெயின்மென்ட் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகளாக உள்ளன.
பார்தி ஏர்டெல் பங்கு விலை
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரேட்டிங்கினை மூடிஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது ஸ்டேபிள் என்ற நிலையில் இருந்து பாசிட்டிவ் ஆக உயர்த்தியுள்ளது. இது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செயல்பாடானது மேம்பட்டுள்ள நிலையில் வந்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இதன் பங்கு விலை மாற்றமின்றி 758.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டெலிகாம் பங்கு நிலவரம்
டிராய்-ன் சமீபத்திய அறிக்கையின் படி, செப்டம்பர் 2021ன் படி ஏர்டெல் நிறுவனம் 2.74 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் முறையே 1.9 கோடி மற்றும் 10.77 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 0.08% வயர்லெஸ் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. அதேசமயம் ரிலையன்ஸ் ஜியோ 4.29% சரிவினைக் கண்டுள்ளது.
வேதாந்தா பங்கு
வேதாந்தா நிறுவனத்தின் பங்குதாரர்களான வேதாந்தா நெதர்லாந்து இன்வெஸ்மெண்ட் பிவி 5,00,14,714 ஈக்விட்டி பங்குகளையும், இதே ட்வின் ஸ்டார் ஹோல்டிங்ஸ் 8,78,72,748 ஈக்விட்டி பங்குகளையும் வாங்கியுள்ளனர். இந்த பரிவர்த்தனைக்கு முன்னதாகவே 65.18% பங்குகளை புரோமோட்டார்கள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு பின்னர் நல்ல ஏற்றத்தினை கண்ட இந்த நிறுவன பங்கின் விலையானது, இன்றைய வர்த்தக முடிவில் 2.54% சரிவினைக் கண்டு 345.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
விப்ரோ பங்கு
டெலிஃபோனிகா மற்றும் விப்ரோ நிறுவனங்கள் இணைந்து ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தினை போட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜெர்மன் மற்றும் பிரேசிலியன் சந்தைகளில் மிகப்பெரிய அளவில், நெட்வொர்க் செயல்பாடுகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் பயன்படும் என தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது கிட்டதட்ட 1% சரிவினைக் கண்டு, 636.50 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
கோல் இந்தியா நிலவரம் என்ன?
வரவிருக்கும் நவம்பர் 29 அன்று இந்த நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இடைக்கால டிவிடெண்ட் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இதன் பங்கு விலையானது கிட்டதட்ட 2% அதிகரித்து, 159.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
வங்கி அல்லாத சிறு நிதி நிறுவனமான ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்துள்ளது. இதன் மூலம் ஒரு புதிய கிரெடிட் கார்டு பிராண்டினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கும் கிரெடிட் கார்டு வசதிகள் கிடைக்கும். இதன் மூலம் இவ்விரு நிறுவனங்களின் வணிகமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 1518.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஜீ என்டர்டெயின்மென்ட் லிமிடெட்
ஜீ என்டர்டெயின்மென்ட் லிமிடெட் மற்றும் சோனி பிக்சர்ஸ் இடையேடான இணைப்பு பேச்சு வார்த்தனையானது, இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதாக ஜீ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான புனித் கோயங்கா தெரிவித்துள்ளார். இதனால் ஜீ யின் வணிக செயல்பாடுகள் இன்னும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஜீ என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது 7% அதிகரித்து, 334.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.