டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஏற்கனவே நடப்பு கணக்கு பற்றாக்குறை எல்லையை தாண்டி விட்டது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் வரி வசூலும் குறையலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து முன்னாள் நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் நடப்பு நிதியாண்டில் வரி வசூல் இலக்கில் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வரி வசூல் இலக்கில் 2.5 லட்சம் கோடி ரூபாய் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார் கார்க்.
எவ்வளவு வரி வசூல்?
நடப்பு நிதியாண்டு ஒரு செயலற்ற ஆண்டாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தனது வலைப்பதிவில் கார்க் கூறியுள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான வரி வசூல் 24.59 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதில் 8.09 லட்சம் கோடி ரூபாய் பங்களிப்பு மாநில அரசுகளுடையது.
மத்திய அரசின் பங்களிப்பு
நிகர அளவில் மத்திய அரசின் வரி வருவாய் 16.50 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கார்ப்பரேட் வரி, உற்பத்தி வரி, சுங்க வரி வசூலில் பெருத்த பின்னடைவு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கார்க் தெரிவித்துள்ளார்.
வரி குறையலாம்
மேலும் கார்பரேட் வரி 8 சதவிகித அளவுக்கும், இதே உற்பத்தி வரி 5 சதவிகித அளவுக்கும், இதே சுங்க வரியானது 10 சதவிகித அளவுக்கும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கார்க் கூறியுள்ளார். ஆக ஒட்டுமொத்த அளவில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 3.5 - 3.75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
நிதி பற்றாக்குறை இலக்கு
வரி வசூலில் பற்றாக்குறை ஏற்படும் இதே நேரத்தில், நிதி பற்றாக்குறை இலக்கை 0.5 - 0.7% வரை திருத்தம் செய்வதை தவிர்க்க முடியாத ஒன்றாக தோன்றுகிறது என்றும் கார்க் தெரிவித்துள்ளார். ஆக வரி வருவாய் மிக மோசமான நிலையில் உள்ள இந்த நேரத்தில், வரி கட்டமைப்பில் சரியான சீர்த்திருத்தங்களை செய்வது சரியானதாக இருக்கும் என்றும் கார்க் தெரிவித்துள்ளார்.