சுபாஷ் சந்திர கார்க் நினைவில் இருக்கிறாரா..? உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதற்கு முன்பு இருந்தே ஆர்பிஐ-ன் ரிசர்வ்கள் மீது அரசுக்கு ஒரு பெரிய ஈர்ப்பு இருந்து வந்தது.
ஆர்பிஐ ரிசர்வ்களில் ஒரு பகுதியை கொடுக்கச் சொல்லி மத்திய அரசு நிதானமாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.
அந்த அழுத்தம் காரணமாக உர்ஜித் படேல், விரல் ஆச்சார்யா போன்றவர்கள் தங்கள் பதவியையே ராஜினாமா செய்ததாகவும் செய்திகள் இருக்கின்றன.
பதவி இழப்பு
அதோடு நம் முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க்கும் தன் பதவியை இழந்ததற்கும் இந்த மத்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் தான் என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். தன் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்படும் வரை, மத்திய அரசுக்கு நெருக்கமாக இருந்த சுபாஷ் சந்திர கார்க் ஏன் திடீரென மத்திய அரசால் நிதி அமைச்சகத்தை விட குறைந்த அதிகாரத்தைக் கொண்ட மின்சார அமைச்சகத்துக்கு பணி மாற்றப்பட வேண்டும்..? காரணம் இல்லாமலா..?
ஒப்புக் கொள்ளவில்லை
என்ன காரணம்..? முன்னாள் ஆர்பிஐ வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான Economic Capital Framework (ECF) கமிட்டி, ஒரு அறிக்கை தயாரித்தது. இந்த கமிட்டி கொடுத்த அறிக்கை முடிவை சுபாஷ் சந்திர கார்க் ஆதரிக்கவில்லை. பொருளாதார விவகாரத் துறைச் செயலர் (சுபாஷ் சந்திர கார்கின்) கையெழுத்து இல்லாமல், அறிக்கையை ஆர்பிஐ-யிடம் சமர்பிக்க முடியாது. ஆகையால் தான் சுபாஷ் சந்திர கார்க் மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின் பதவியில் இருந்து அவரே விலகினார்.
விமர்சனம்
சுபாஷ் சந்திர கார்க் பதவியில் இருந்து விலகிய பின், தொடர்ந்து பாஜக அரசை அவ்வப் போது விமர்சித்தும் வந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டு குண்டுகளை, பாஜகவை விமர்சித்துப் போட்டு இருக்கிறார். அந்த குண்டுகள் எதைப் பற்றிச் சொல்கின்றன..? ஜிடிபி மற்றும் 20 லட்சம் கோடி தொடர்பான குண்டுகள் இதோ!
ஜிடிபி
இந்தியப் பொருளாதாரம் 2020 - 21 நிதி ஆண்டில் சுமாராக 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருளாதாரம் சரியும் எனச் சொல்லி இருக்கிறார். அதாவது, இந்த நடப்பு நிதி ஆண்டில் ஒட்டு மொத்த ஜிடிபியில் 10 சதவிகிதம் சரியலாம் எனச் சொல்லி இருக்கிறார். இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சரிவு. இதற்கு அரசின் தவறான கொரோனா லாக் டவுன்தான் காரணம் எனவும் சூடு கிளப்பி இருக்கிறார்.
1.5 லட்சம் கோடியாக இருக்கலாம்
அதனைத் தொடர்ந்து, அரசு அறிவித்த 21 லட்சம் கோடி ரூபாய் ஊக்குவிப்புத் திட்ட தொகுப்பில் (Stimulus Package), வெறும் 1.4 - 1.5 லட்சம் கோடிக்கு தான் திட்டங்கள் இருக்கின்றன. இது இந்தியாவின் ஒட்டு மொத்த ஜிடிபியில் 0.7 சதவிகிதம் தான் எனவும் பாஜக அரசை விமர்சித்து இருக்கிறார் சுபாஷ் சந்திர கார்க்.