ரஷ்ய உக்ரைன் போர் எதிரொலியால் இந்தியாவில் விலைவாசி உயர்வு விண்ணைத் தொடு அளவிற்கு உயர்ந்து வருகிறது, இதன் வாயிலாக நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் டிவிட்டரில் எப்போது அதிரடி காட்டும் சுப்பிரமணியன் சாமி தற்போது ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுப்பிரமணியன் சாமி
சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டர் பதிவில் வெறும் ஒரு வாரத்தில் இந்தியாவின் ஜிடிபி அமெரிக்க டாலர் மதிப்பில் 3 டிரில்லியன் டாலர் அளவில் இருந்து 2.9 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தால் ஜிடிபி 2.8 டிரில்லியன் டாலராகச் சரியும்.
5 டிரில்லியன் டாலர்
இப்படித் தொடர்ந்து குறைந்தால் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் கனவைக் கட்டாயம் அடைவது கஷ்டமாகிவிடும். இந்தியாவில் 640 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணி உள்ளது. ரிசர்வ் வங்கி ஏன் இன்னும் தலையிடாமல் உள்ளது எனச் சுப்பிரமணியன் சாமி டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
டாலர் - ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவை பதிவு செய்து உள்ளது, இன்று நாணய சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 76.76 ஆகச் சரிந்துள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
இறக்குமதி
இதேவேளையில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், தங்கம் போன்ற அனைத்திற்கும் டாலர் மூலம் பேமெண்ட் செய்யப்படும் காரணத்தால் அனைத்திற்கும் கூடுதலான பணத்தைக் கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டும். இதனாலேயே இந்தியாவில் நுகர்வோர் பொருட்களின் விலை உயர முக்கியக் காரணமாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 1.51 சதவீதம் அதிகரித்து 121.37 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.98 சதவீதம் அதிகரித்து 125.65 டாலராக உள்ளது.
இந்தியா
இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலக்கரியும், கச்சா எண்ணெய்-ம் மிகவும் முக்கியம், இப்படியிருக்கையில் இவ்விரண்டும் வெளிநாட்டை நம்பியிருக்கும் காரணத்தாலேயே, இந்தியாவின் நிலை ரஷ்ய - உக்ரைன் போர் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.