பாரதிய ஜனதா கட்சியில் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுப்ரமணியன் சுவாமி, அணு குண்டு கணக்கான ஸ்டேட்மெண்ட்களைப் போடுவதில் வல்லவர் என்பதை அறிவோம்.
கடந்த சில மாதங்களாக, தன் சொந்த கட்சியான பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளையே பலமாக விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்.
இப்போது தன் பரபர ஸ்டேட்மெண்ட்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று இருக்கிறார். அப்படி என்ன சொல்லிவிட்டார்.
சமீபத்தைய பேச்சு
மீண்டும் சில தினங்களுக்கு முன் இந்தியா பொருளாதாரம் மிக மோசமான கால கட்டத்தில் இருக்கிறது. இந்தியாவில் "tax terrorism" நடந்து கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் நிறுத்த வேண்டும் எனச் சொன்னார். அப்போது தான் முதலீட்டாளர்கள் தைரியமாக இந்தியாவுக்குள் வந்து முதலீடு செய்வார்கள் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக தாக்கி இருக்கிறார்.
எச்சரிக்கை
அதோடு "இந்தியாவில் எல்லா பொருளாதார காரணிகளும் கீழ் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. இதே நிலை நீடித்தால் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகலாம் எனவும் எச்சரித்து இருக்கிறார். அப்படி வங்கிகள் எல்லாம் மூடப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் ஒரு மிசப் பெரிய பேரழிவைச் சந்திக்க வேண்டி இருக்கும்" என கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.
முன்னமே சொன்னேனே
இதற்கு என்ன தான் தீர்வு எனக் கேட்ட போது "முதலில் இந்தியாவின் வருமான வரியை ஒழித்துக் கட்டுங்கள். இந்தியாவில் போதுமான சப்ளை இருக்கிறது. எனவே ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து, மக்கள் கையில் புழக்கத்துக்கு விடுங்கள், தானே டிமாண்டி அதிகரிக்கும்" எனச் சொல்லி இருக்கிறார் சு.சுவாமி.
8 வழிச் சாலை
இந்தியாவில் கட்டுமானம் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரசர் துறைகளை மேம்படுத்த, பெரிய பெரிய சாலைகளைக் கட்ட வேண்டும். 6 வழிச் சாலை, 8 வழிச் சாலை போன்றவைகளை மத்திய அரசு கட்ட வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் 8 வழிச் சாலை தானே பெரிய பிரச்சனையாக இருக்கிறது. கொஞ்சம் அதற்கு முந்தைய நாள் பேசியதையும் பாருங்களேன்
சென்னையில் அதிரடி
கடந்த ஜனவரி 09, 2020, வியாழக்கிழமை அன்று, நம் சென்னை மாநகரத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஒருங்கிணைத்து நடத்திய 8-ம் ஆண்டு ThinkEdu என்கிற கூட்டத்தில் நம் சுப்ரமணியன் சுவாமியும் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வறுத்து எடுக்கத் தொடங்கினார்.
பட்டம் வாங்குனா பத்தாது
"பொருளாதாரம் என்பது பரந்து விரிந்தது (Macro). ஒரு துறையில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அது மற்றும் ஒரு துறையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்துக்குச் சென்று ஒரு பட்டம் பெற்றுக் கொண்டு இதை எல்லாம் கற்றுக் கொள்ள முடியாது" என நிர்மலா சீதாராமனையும் அவரின் கல்வித் தகுதியையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
என்னை நிதி அமைச்சர் ஆக்குங்க
"பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் புரியாது. எனவே மோடி என்னை நிதி அமைச்சர் ஆக்க வேண்டும்" என போகிற போக்கில் பற்ற வைத்து இருக்கிறார். இத்தனை நாள் சூசகமாக நிர்மலா சீதாராமன் மற்றும் மோடியின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்துக் கொண்டு இருந்தவர் இப்போது நேரடியாக நிதி அமைச்சர் பதவி கேட்டு பாஜகவையும், நிர்மலா சீதாராமனையும் ஆட்டம் காண வைத்து இருக்கிறார்.