சன் பார்மா நிறுவனம் ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர இழப்பாக 1,655.6 கோடி ரூபாயினை பதிவு செய்துள்ளது.
சன் பார்மாவின் துணை நிறுவனமான டாரோ பார்மாசூட்டிகல் லிமிடெட் மூலம் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வழக்கில் சிக்கிய இந்த நிறுவனம், அமெரிக்கா அரசுக்கு இழப்பீடு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக சன் பார்மா நிறுவனம் அறிவித்துள்ளது.
முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளரான சன் பார்மா 1,387.5 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
டாரோ இழப்பீடு மற்றும் நஷ்டம் மொத்தம் 478.9 மில்லியன் டாலர் (3,178 கோடி ரூபாய்) என அறிவித்துள்ளது. அமெரிக்கா நீதித்துறை விசாரணைகளின் கீழ் 418.9 மில்லியன் டாலர் இழப்பீடாக செலுத்த வேண்டிய நிலையில், அது சன் பார்மாவிலும் எதிரொலிப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆக இந்த ஒரு முறை இழப்பீட்டின் காரணமாக சன் பார்மாவும் நஷ்டத்தினை கண்டுள்ளது. மொத்தத்தில் சன் பார்மாவுக்கு இது ஒரு மோசமான காலாண்டாகவே இருந்துள்ளது. சந்தையில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் பெரியளவில் மாற்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் அதன் விற்பனை நாட் குட் என்றும் தெரிவித்துள்ளது.
திலீப் சாங்வி தலைமையிலான நிறுவனம், ஒருங்கிணைந்த விற்பனையில் 7,467 கோடி ரூபாயினை ஈட்டியுள்ளது. எனினும் இது கடந்த ஆண்டினை காட்டிலும் 9.6% குறைந்துள்ளது. ஆக மொத்தத்தில் முதல் காலாண்டு அறிக்கையானது கொரோனா வைரஸின் தாக்கத்தினை பிரதிபலிப்பதாக அறிவித்துள்ளது. லாக்டவுன் காரணமாக அதன் சந்தைகள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளதாகவும் சன் பார்மா தெரிவித்துள்ளது.
சவாலான நிலை இருந்தபோதிலும், நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அமெரிக்காவில் எந்தவொரு சிறப்பு முக்கிய தயாரிப்புகளும் சந்தை பங்கினை இழக்கவில்லை. இந்திய உள்நாட்டு சந்தையிலும், நாங்கள் எங்கள் சந்தை பங்கினை இழக்கவில்லை. எங்களின் சந்தை பங்கினை நாங்கள் பராமரித்து வருகிறோம் என்றும் ஷாங்க்வி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோயின் காரணமாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் உலகின் பிற சந்தைகளிலும் சன் பார்மாவின் விற்பனை குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ளது. எப்படி இருப்பினும் இந்திய சந்தையில் 32% பகுதியினை சன் பார்மா கொண்டுள்ளது. முதல் காலாண்டில் விற்பனை 3% வளர்ச்சி கண்டு 2,388 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.