இந்தியா உலக நாடுகளுக்கு முக்கிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு சந்தையாக மாறியிருப்பது மட்டும் அல்லாமல் தற்போது பல துறையில் தொழில்நுட்ப அளவிலும் முன்னோடியாக மாறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று காலத்தில் இருந்தே இந்தியாவில் முதலீடு செய்து வரும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இந்தியாவை தனது முக்கிய சந்தையாக கருதி வருகிறது.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 2019- 20 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்தது. இதில் வியந்து போன கூகுள் நிர்வாகம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் வர்த்தக வாய்ப்பை மொத்தமாக கைப்பற்ற முடிவு செய்தது.

இதன் வாயிலாக ஜூலை 2020ல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை India Digitisation Fund ஆக அடுத்த 5 முதல் 7 வருடத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த முதலீட்டின் வாயிலாக கூகுள் இந்தியாவில் டிஜிட்டல் சேவை தளத்தை உலக நாடுகளுக்கு இணையாக மேம்படுத்தும் முயற்சியில் இறங்குவதாக அறிவித்தது.
இந்த நிலையில் பிரதமரின் அமெரிக்க பயணத்தை தொடர்ந்து 23 ஆம் தேதி பிரதமர் மோடி சுந்தர் பிச்சை-யை நேரில் சந்தித்து பேசியதை தொடர்ந்து முக்கிய அறிவிப்பை கூகுள் சார்பாக சுந்தர் பிச்சை தெரிவித்தார். மோடியை சுந்தர் பிச்சை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கூகுள் விரைவில் குஜராத் GIFT CITY-யில் குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டரை துவங்க உள்ளோம், அதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 பில்லியன் டாலர் மதிப்பிலான India Digitisation Fund தொகையை முதலீடு செய்ய துவங்க உள்ளோம் என செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டர் வாயிலாக மட்டும் அல்லாமல், கூகுள் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் இந்த 10 பில்லியன் டாலர் தொகையில் முதலீடு செய்ய உள்ளோம் என தெரிவித்தார் கூகுள்.
இதைவிட முக்கியமாக சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் தனது அனைத்து இணைய சேவைகளிலும், குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள Google Bard தளத்தில் ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பிற மொழிகளையும் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 100-language initiative திட்டத்தின் கீழ் விரைவில் பல இந்திய மொழிகளுக்கு Bot கொண்டு வர உள்ளதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications