உலகளவில் கடந்த ஒரு வருடத்தில் டெக் நிறுவனங்கள் பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டுள்ள வேளையில் வெளிநாடு முதல் உள்நாட்டில் இருக்கும் நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
இதில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிஇஓ முதல் ஹெச்சிடிஎப்சி வங்கி தலைவர் வரையில் பலர் சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.
சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தனது மொத்த சொத்து மதிப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை இழந்துள்ளார் என IIFL Hurun India Rich List 2022 அறிக்கை கூறுகிறது. கூகுள் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு போட்டிப்போட்டு வரும் நிலையில் டெக் துறையில் ஏற்பட்ட பாதிப்பு பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
20 சதவீதம் சரிவு
கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட சரிவின் மூலம் சுந்தர் பிச்சை-யின் நிகரச் சொத்து மதிப்பில் 20 சதவீதம் சரிந்து 5,300 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. ஆனாலும் ஹூரன் 2022 பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 பணக்கார தொழில்முறை மேலாளர்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ளார்.
புதிய பங்கு ஒதுக்கீடுகள்
கூகுள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் சந்தர் பிச்சைக்குப் புதிய பங்கு ஒதுக்கீடுகளை வழங்கியது, ஆதற்கு அவர் ஏற்கனவே நிறுவனம் எனக்கு "தாராளமாக" ஊதியம் அளித்து வருவதாகக் கூறி, நிறுவனத்தின் ஆஃபரை நிராகரித்தார். இந்நிலையில் தற்போது சொத்து மதிப்பு குறைந்துள்ளதால் புதிதாகப் பங்கு ஆஃபர் கொடுத்தால் கட்டாயம் ஏற்பார் எனத் தெரிகிறது.
இந்திய வம்சாவளியினர்
அமெரிக்க நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் கடந்த ஒரு வருடத்தில் அதிகப்படியான சொத்து மதிப்பை இழந்துள்ளனர். 2022 ஆரம்பம் முதல் இந்தச் சரிவு துவங்கியது.
சாந்தனு நாராயண்
அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் அவர்களின் சொத்து மதிப்பு 16% சரிந்து ₹3,800 கோடியாக உள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் மாறாமல் 6,200 கோடி ரூபாயாக உள்ளது.
அஜய் பங்கா
மாஸ்டர்கார்டு முன்னாள் செயல் தலைவரும், தற்போது ஈக்விட்டி நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவருமான அஜய் பங்கா-வின் சொத்து மதிப்பு 6 சதவீதம் சரிந்து 6,500 கோடி ரூபாயாக உள்ளது.
தாமஸ் குரியன்
தற்போது கூகுள் கிளவுட்டின் தலைவராக இருக்கும் தாமஸ் குரியன், கடந்த ஆண்டுச் சொத்து மதிப்பில் இருந்து 3% இழந்து 12,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார்.
ஜெயஸ்ரீ உல்லால்
அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெயஸ்ரீ உல்லால்-ன் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 23 சதவீதம் அதிகரித்து 16,600 கோடி ரூபாய் உடன் உள்ளார்.
நிகேஷ் அரோரா
இதேபோல் சாப்ட்பேங் குரூப்-ன் முன்னாள் தலைவர் மற்றும்
பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவருமான நிகேஷ் அரோரா சொத்து மதிப்பு 29 சதவீதம் அதிகரித்து 8500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் பெப்சி-கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திரா நூயி சொத்து மதிப்பு 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
டாப் 10 இந்தியர்கள்
டெக் தலைவர்கள் பட்டியலில் அதிகச் சொத்து மதிப்பு வைத்துள்ளவர்களில் டாப் 10 இவர்கள் தான்.
ஜெயஸ்ரீ உல்லால் - 16,600 கோடி ரூபாய் - அரிஸ்டா நெட்வொர்க்ஸ்
தாமஸ் குரியன் - 12,100 கோடி ரூபாய் - ஆரக்கிள்
நிகேஷ் அரோரா - 8,500 கோடி ரூபாய் - பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ்
இக்னேஷியஸ் நவில் நோரோன்ஹா - 6,500 கோடி ரூபாய் - அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
அஜய் பங்கா - 6,500 கோடி ரூபாய் - மாஸ்டர்கார்டு
சத்யா நாதெல்லா - 6,200 கோடி ரூபாய் - மைக்ரோசாப்ட்
சுந்தர் பிச்சை - 5,300 கோடி ரூபாய் - கூகிள்
இந்திரா நூயி - 4,000 கோடி ரூபாய் - பெப்சிகோ (முன்னாள்)
சாந்தனு நாராயண் - 3,800 கோடி ரூபாய் - அடோப்
ஆதித்யா பூரி - 1,600 கோடி ரூபாய் - HDFC வங்கி