ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை ஆகிய பிரிவில் சிறப்பான மற்றும் சிறந்த சேவை செய்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்படும்.
இந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெற்றவர்களின் பெயர்களைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனவரி 25ஆம் தேதி அறிவித்தார். இந்த வருடம் வணிகம் மற்றும் தொழில் பிரிவில் சுமார் 6 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.
பத்ம பூஷன் விருது
இந்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூஷன் விருதுகளைத் தொடர்ந்து பத்ம பூஷன் விருது 3வது பெரிய விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பல துறையில் சாதனை படைத்த அல்லது சிறந்த சேவையாற்றிய நபருக்கு இத்தகைய விருதுகளை வழங்குவது வழக்கம்.
6 பேர்
அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம பூஷன் விருது வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் ஊட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த இந்தியாவின் முதல் தலைமை பாதுகாப்பு தளபதியான ஜெனரல் பிபின் ராவத்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
என்.சந்திரசேகரன்
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன், இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவிய வேக்சின் தயாரிப்பு நிறுவனங்களான சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா-வின் சைரஸ் பூனாவாலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர்களான கிருஷ்ணா எல்லா மற்றும் சுசித்ரா எல்லா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுந்தர் பிச்சை மற்றும் சத்ய நாடெல்லா
இதைத் தொடர்ந்து அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும், இந்தியர்கள் ஆளும் மிக முக்கியமான ஆல்பபெட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை மற்றும் சத்ய நாடெல்லா ஆகிய இருவருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராம்நாத் கோவிந்த்
இந்த வருடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுமார் 128 பத்ம விருதுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன், 107 பத்ம ஸ்ரீ விருதுகள் அடங்கும். இந்த 128 விருதுகளில் 34 பெண்கள் 10 பேர வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், 13 பேர் மரணத்திற்குப் பின் விருதுகளைப் பெறுபவர்கள்.