உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வர்த்தகமும், பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், நகை விற்பனை, வைர ஏற்றுமதி ஆகியவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் தங்கத்தை விடவும் வைரத்திற்கான டிமாண்ட் உலக நாடுகளில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் இருக்கும் பல வைர வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் புதிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
வைர வியாபாரிகள்
இந்தியாவில் முதல் லாக்டவுன் காலத்தில் வைர வியாபாரிகளிடம் போதுமான இருப்பு இருந்தது, அதனால் லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின் உருவான வர்த்தகத்தை எளிதாகச் சமாளித்துள்ளனர். ஆனால் 2வது கொரோனா லாக்டவுன் விதிக்கப்பட்ட பின்பு பணிக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையும், உற்பத்தி அளவும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
வைரத்திற்கு டிமாண்ட்
உலக நாடுகளில் வைரத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ள வேளையிலும், வைரத்தை பாலிஷ் செய்யும் பணியும் முடங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஊழியர்கள் தான். லாக்டவுன் விதிக்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான ஊழியர்கள் சொந்த உருக்கு சென்று மீண்டும் விவசாயத்தில் இறங்கியுள்ளனர்.
விவசாயம்
மேலும் சொந்த ஊருக்குச் சென்றுள்ள ஊழியர்கள் (விவசாயிகள்) கட்டாயம் அறுவடைக் காலம் முடியும் வரையில் திரும்பப் பணிக்கு வரமாட்டார்கள். இவர்களை மீண்டும் அழைக்கவும், வைர தயாரிப்பு பணிகளை அதிகரிக்கவும் வைர வியாபாரிகள் புதிய முடிவை எடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று
2வது கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் இந்தியாவில் வைர பாலிஷ் மற்றும் தயாரிப்புகள் பணிகள் சுமார் 20 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இந்த வேளையில் உலகளவில் வைரத்திற்கான தேவையும் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதனால் குஜராத் பகுதியில் இருக்கும் வைர வியாபாரிகள் உடனடியாகத் தயாரிப்பு அளவை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
10% சம்பள உயர்வு
இதனால் வைரம் பாலிஷ் தொழிலில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களைத் தக்க வைக்கவும், சொந்த ஊருக்குச் சென்றுள்ள ஊழியர்களைத் திரும்பவும் அழைத்து வர 5 முதல் 10 சதவீதம் வரையில் சம்பள உயர்வை சூரத் வைர வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்தியா ஆதிக்கம்
வைரத்தின் இருப்பு இல்லாத காரணத்தாலும், உலகளவில் டிமாண்ட் அதிகரித்துள்ளதாலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் வைரத்திற்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. பொதுவாகவே உலகளவில் விற்பனை செய்யப்படும் 15 வைரத்தில் 14 வைரம் இந்தியாவில் கட் செய்யப்பட்டுப் பாலிஷ் செய்யப்பட்டவை தான்.
சம்பள உயர்வு
இதனால் ஊழியர்களுக்குக் கூடுதலாக 5 முதல் 10 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிப்பது பெரிய சுமையாக இருக்காது என ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் குஜராத் பகுதி தலைவரான தினேஷ் நவதியா தெரிவித்துள்ளார்.
வைர ஏற்றுமதி வர்த்தகம்
மே மாதம் மட்டும் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கட் அண்ட் பாலிஷ் டைமெண்ட் மதிப்பு 2.01 பில்லியன் டாலர், அதாவது 14,690.58 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விடவும் 131.44 சதவீதம் அதிகமாகும். கடந்த வருடம் வெறும் 6,571.58 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா.
20 பில்லியன் டாலர்
இந்த வருடம் வைரத்திற்கான டிமாண்ட் மற்றும் வர்த்தகம் சிறப்பாக இருந்தால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வைரத்தின் மொத்த மதிப்பு 20 பில்லியன் டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்திற்குச் சீனாவிலும், இந்தியாவிலும் எந்த அளவிற்கு டிமாண்ட் இருக்கிறதோ, அதே அளவிற்கு வைரத்திற்குப் பிற நாடுகளில் டிமாண்ட் உள்ளது.