சீனா, தென் கொரியா, இத்தாலி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது என்பது அதிர்ச்சியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய மைய இடமாகக் கருதப்பட்ட Wuhan மாகாணத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த மாணவர்கள் சிலருக்கு கொரோனா இருந்தது இந்திய மக்களைப் பெரிய அளவில் பயம்புறுத்தியது. ஆனால் அவர்களுக்குச் சில நாட்கள் மருத்துவச் சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியதால் மக்கள் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் தற்போது பெங்களூரு, டெல்லி எனப் பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் செய்வது அறியாமல் அனைத்து விதமான முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை
கொரோனா வைரஸ் மக்கள் மனத்தில் மிகப்பெரிய பயத்தை உருவாக்கியுள்ளது இதன் எதிரொலியாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல பொருட்களை மக்கள் வாங்கிக் குவித்து வருகின்றனர்.
அதில் முக்கியமான ஒன்று காற்று மூலம் வியாதி பரவக்கூடாது என்பதற்காக மக்கள் தற்போது அதிகளவில் மாஸ்க் (முகமூடி) வாங்கிக் குவித்து வருகின்றனர்.
ரீடைல் சந்தை
மருந்துக் கடைகள், மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக மாஸ்க் விற்பனை தாறுமாறாக அதிகரித்தது உள்ளது. அதுவும் குறிப்பாகச் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் ஸ்டாக் காலியாகி தட்டுப்பாடு நிலவுகிறது.
விலை
இந்தத் தட்டுப்பாட்டின் காரணமாகச் சந்தையில் தற்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சர்ஜிக்கல் மாஸ்க் விலை 10 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிட்டதட்ட 300 சதவீத விலை உயர்வு.
விலை உயர்வைக் கண்டு மக்கள் வருந்தினாலும், வேறு வழி இல்லாமல் வாங்கி வருகின்றனர். இதனை யாராலும் எதிர்த்தும் கேள்வி கேட்கவில்லை. காரணம் சந்தையில் தட்டுப்பாடு.
பிற பொருட்கள்
சர்ஜிக்கல் மாஸ்க் மட்டும் அல்லாமல் N95 மாஸ்க், சேனிடைசர் போன்ற இதர கிருமி நாசினிகளின் விலையும் அதிகளவில் விலை உயர்ந்துள்ளது, சந்தையில் இதற்கு அதிகளவிலான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எனவே மக்கள் மூன்கூட்டிய திட்டமிட்டுத் தேவையான பாதுகாப்பு பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
சுகாதார ஊழியர்கள்
தற்போது சாமானிய மக்களை விடவும் அதிகளவில் ஆபத்தில் இருப்பது சுகாதார மற்றும் துப்புரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் தான். மக்களைக் காப்பாற்றுவதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இவர்களுக்கும் போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.