சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படம் வெளியாகி 25 நாட்களில் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
வழக்கமாக கோடை விடுமுறை காலங்களில் மக்கள் அதிகமாக திரையரங்குகளுக்கு வருவார்கள். குழந்தைகளுக்கு விடுமுறை, உறவினர்கள் வருகை என பொழுதுபோக்கு தேவைகளுக்காக மக்கள் மே மாதத்தில் தியேட்டர்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படம் மே 15ஆம் தேதி அன்று ரிலீஸானது. இந்த கோடை விடுமுறையில் அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் படமாக மாறி பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் குவித்துவிட்டது.

இந்நிலையில் கருப்பு படத்தை தயாரித்த 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' (Dream Warrior Pictures) தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏனெனில் கருப்பு திரைப்படம் படம் தியேட்டருக்கு வரும் முன்பு மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்தித்தது.
அதாவது விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவலின் படி, முதலில், படத்தின் ஓடிடி (OTT) உரிமம் சுமார் 75 முதல் 80 கோடி வரை விற்பனையாகும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு எதிர்பார்த்தார். ஆனால், ஓடிடி சந்தையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக வெறும் 30 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. இதனால் திட்டமிட்ட பட்ஜெட்டில் 45 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டதாம். இந்த நிதி நெருக்கடி காரணமாக 2025 தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படம் 2026 மே மாதத்திற்கு தள்ளிப்போனது.

இது தவிர சில நிதி பிரச்சனைகள் ரிலீஸ் நாளான மே 14 மற்றும் 15 தேதிகளிலும் எதிரொலித்தன. தியேட்டர்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை குறித்த பிரச்சனைகளால், தமிழகத்தின் பல திரையரங்குகளில் முதல் நாளின் காலை 9 மணி காட்சி, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அந்த சமயத்தில் பலரும் நிதி கொடுத்து தான் படத்தை வெளியிட வைத்துள்ளனர். இத்தனை தடைகளையும் தாண்டி மே 15 அன்று வெளியான இப்படம், ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. ரிலீஸ் சமயத்தில் முடங்கிப் போகும் நிலையில் இருந்த படம், தற்போது 300 கோடி ரூபாய் வசூல் செய்து இமாலய வெற்றி பெற்றுள்ளது.
தங்களின் இக்கட்டான சூழ்நிலையில் பண உதவி செய்த ஃபைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் , திரையுலகினர் ஆகியோருக்கு ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நன்றி கூறியுள்ளது. மேலும், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜிக்கும், படத்தில் நடித்த த்ரிஷா, நட்டி சுப்ரமணியம், இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே 300 கோடி ரூபாய் வசூலை குவித்த படம் என்ற பெருமை கருப்பு படத்திற்கு உண்டு.சில ஆண்டுகளாக வசூல் ரீதியாக சூர்யாவுக்கு பெரிய படங்கள் அமையாமல் இருந்த நிலையில் கருப்பு படம் அந்த குறையை போக்கி பெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

