இந்திய டெலிகாம் சந்தை பெரும் போட்டி மற்றும் விலை போரில் இருந்து வெளியேறி நிலையான வர்த்தகத்தைக் கடந்த சில காலாண்டுகளாகப் பெற்று வரும் நிலையில், நீண்ட காலமாக மத்திய டெலிகாம் தள்ளிப்போட்டு வந்த 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்த முடிவு செய்தது.
டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் வேளையில் 5ஜி பெரும் சுமையாகப் பார்க்கப்பட்டாலும், வருமானம் ஈட்டுவதற்கு நல்ல வழியாக இருந்தது.
ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஜியோ உடன் போட்டிப்போட தற்போது இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானி களத்தில் இறங்கியுள்ளார்.
அதானி குழுமத்தின் இந்தத் திடீர் முடிவுக்கு முக்கியக் காரணம் அவருடைய தளபதி சுவேஷ் சட்டோபாத்யாயா தான்.. யார் இவர்..?
ரிலையன்ஸ் ஜியோ
2016ல் 4ஜி சேவை மட்டுமே வைத்துக்கொண்டு இந்திய டெலிகாம் சந்தையை மொத்தமாக வாரிப்போட்டுக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோ-வுக்குப் போட்டியாக யாருமே இல்லை என்ற நிலையில், கட்டணத்தையும், சேவை தரத்தையும் உயர்த்தி ஏர்டெல் போட்டிப்போட்டு வருகிறது. மேலும் வோடபோன் ஐடியா உயிரை கையில் பிடித்துக்கொண்டு இயங்கி வருகிறது.
வெறும் 3 நிறுவனங்கள்
ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு முன்பு இந்திய டெலிகாம் சந்தையில் 10க்கும் அதிகமான டெலிகாம் நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே போராடி வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் 5 ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்து விண்ணப்பம் கொடுத்துள்ளது. டெலிகாம் துறையும் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
டெலிகாம் உரிமம்
அதானி குழுமத்திடம் ஏற்கனவே நேஷ்னல் லாங் டிஸ்டன்ஸ் (NLD) மற்றும் இண்டர்நேஷ்னல் லாங் டிஸ்டன்ஸ் (ILD) சேவைக்கான லைசென்ஸ் உள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் கௌதம் அதானியின் டெலிகாம் துறை தளபதி சுவேஷ் சட்டோபாத்யாயா ஸ்பெக்டரம் ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பம் அளித்தது.
திவால்
அதானி குழுமத்தின் வருகை மூலம் வோடபோன் திவால் ஆகலாம். ஏர்டெல் மிகவும் தொற்ப வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். எப்படி இருந்தாலும் அதானி குழுமத்தின் வருகை மூலம் இந்திய டெலிகாம் துறை 2016 சம்பவத்தை மீண்டும் காணப்போகிறது.
சுவேஷ் சட்டோபாத்யாயா
அதானி குழுமத்தின் டெலிகாம் துறை தளபதியாகப் பார்க்கப்படும் சுவேஷ் சட்டோபாத்யாயா 1994ஆம் ஆண்டு முதல் டெலிகாம் துறையில் பணியாற்றி வருகிறார். டெலிகாம் திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டே சுவேஷ் சட்டோபாத்யாயா-வை 2021ல் இப்பிரிவு தலைவராக அதானி குழுமம் நியமித்தது.
அதானி எண்டர்பிரைசர்ஸ்
சுவேஷ் சட்டோபாத்யாயா மே 2021ல் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் Infrastructure Strategy and Network Development பிரிவின் ஜெனரல் மேனேஜர் ஆகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு Sify நிறுவனத்தில் 2.4 வருடம், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 11.4 வருடம், ஏர்டெல் நிறுவனத்தில் 6 வருடம், இதோடு பாரத் கனெக்ட், சீமென்ஸ், Hughes கம்யூனிகேஷன்ஸ், ஹெச்சிஎல் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
டாடா, ஏர்டெல்
சுவேஷ் சட்டோபாத்யாயா ஏற்கனவே டாடா கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல் போன்ற முக்கியமான டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கும் நிலையில் அதானி குழுமத்திற்குக் கூடுதல் பலம் தான்.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கைப்பற்றும் 5ஜி அலைக்கற்றை வைத்து B2B வர்த்தகத்தில் தான் பயன்படுத்தும், குறிப்பாக நாடு முழுவதும் இருக்கும் டேட்டா சென்டர்களை வைத்துக்கும் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் இத்துறை சேவையை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
B2C சேவையில் இறங்கும்
ஆனால் சிலர் அதானி கட்டாயம் B2C அதாவது மக்கள் பயன்படுத்தும் டெலிகாம் சேவை பிரிவில் கட்டாயம் இறங்கும், வோடபோன் ஐடியாவை கைப்பற்றி ஜியோ உடன் போட்டிப்போடும் எனவும் கருத்து நிலவுகிறது.
ஜூலை 26
ஜூலை 26ஆம் தேதி நடக்க இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், வோடபோன் ஐடியா ஆகியவை 5ஜி சேவையை அளிப்பதற்காக அலைக்கற்றை வாங்க ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளது.
4.3 லட்சம் கோடி ரூபாய்
ஜூலை 26 ஆம் தேதி நடக்க இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 72,097.85 MHz அளவிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விடப்படுகிறது, இந்த ஏலத்தின் மதிப்பு மட்டும் 4.3 லட்சம் கோடி ரூபாய். மத்திய அரசு இந்த ஏலத்தின் மூலம் பெரும் தொகையைப் பெற உள்ளது.
டெலிகாம் துறையில் நடக்க இருக்கும் ஆட்டத்தைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.