ஸ்வீடன் நாட்டில் பணவீக்கம் கணித்ததைக் காட்டிலும் அதிகளவில் உயர்ந்துள்ள காரணத்தால் அந்நாட்டு மத்திய வங்கி திடீரெனத் தனது பென்ச்மார்க் வட்டியை 1 சதவீதம் முழுமையாக உயர்த்தி 1.75 சதவீதமாக இன்று அறிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அதுபோன்ற வட்டி உயர்வு மீண்டும் என எச்சரித்தும் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்க உள்ளது.
இக்கூட்டத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டு உள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் ரிஸ்க் எடுத்து 1 சதவீதம் அதாவது 100 அடிப்படை புள்ளிகள் உயர்த்தினால் என்ன ஆகும் தெரியுமா...? குறிப்பாக மும்பை பங்குச்சந்தை நிலை என்ன தெரியுமா..?
பெடரல் ரிசர்வ்
பெடரல் ரிசர்வ்-ன் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்க உள்ள நிலையில் இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 578.51 புள்ளிகள் உயர்ந்து 59,714.74 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 194 புள்ளிகள் உயர்ந்து 17,816.25 புள்ளிகளை எட்டியுள்ளது.
நாணய கொள்கை கூட்டம்
பெடரல் ரிசர்வ்-ன் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் ஜெரோம் பவல் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஜெரோம் பவல் தொடர்ந்து மறைமுகமாகவே பேசி வரும் நிலையில் முழுமையாக 1 சதவீதம் உயர்த்தினால் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பென்ச்மார்க் வட்டி
தற்போது இருக்கும் நிலையில் பென்ச்மார்க் வட்டியை எந்த அளவுக்கு உயர்த்தினாலும் போதுமானதாக இருக்காது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் எந்த ஒகு தடாலடி மாற்றமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
இந்திய சந்தை
இந்திய சந்தை அடிப்படையில் சிறப்பான நிலையிலேயே உள்ளது, அதனால் அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு பெரிய அளவில் பாதிக்காது, ஆனால் 1 சதவீத வட்டி விகிதம் என்பது அன்னிய முதலீடுகளை வெளியேற்ற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
வியாழக்கிழமை
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகித முடிவைப் புதன்கிழமை மாலை அறிவிக்க உள்ள நிலையில் வியாழக்கிழமை வர்த்தகச் சந்தை பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதம் அமெரிக்க நிறுவனங்களையும், அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களையும் கடுமையாகப் பாதிக்கும்.