இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி மற்றும் ஆன்லைன் சேவை நிறுவனமான ஸ்விக்கி கடந்த 2 வருடங்களாகச் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஸ்விக்கி விவேக் சுந்தர்
ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (COO) விவேக் சுந்தர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அக்டோபர் மாதம் இப்பதவியை விட்டும், நிறுவனத்தை விட்டும் வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார்.
3 வருட பணி
2018ல் ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பதவியேற்ற விவேக் சுந்தர் 3 வருடத்திற்குப் பின் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தற்காலிகமாக இப்பதவியில் ஸ்விக்கி நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மெஜெட்டி ஏற்க உள்ளார்.
500 நகரங்களுக்கு விரிவாக்கம்
விவேக் சுந்தர் கடந்த 3 வருடத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் வர்த்தகத்தை நாட்டின் 500 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் ஆன் கிரவுட் பணிகளையும் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளார். குறிப்பாகக் கொரோனா லாக்டவுன் காலத்தில் இப்பணிகள் மிகவும் வேகமாக நடந்துள்ளது.
விவேக் சுந்தர் ஐஐஎம் பட்டதாரி
ஐஐஎம் கல்கத்தா கல்லூரி பட்டதாரியான விவேக் சுந்தர் கடந்த 23 வருடமாக எப்எம்சிஜி துறையில் பணியாற்றியுள்ளார். சுமார் 20 வருடமாக ப்ரோக்டர் அண்ட் கேம்பெல் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஸ்விக்கி நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு P&G நிறுவனத்தின் ஆப்பிரிக்க வர்த்தகத்தின் தலைவராக இருந்தார்.
2வது உயர் அதிகாரி
கடந்த ஒரு வருடத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் 2வது உயர் அதிகாரி விவேக் சுந்தர், இதற்கு முன்பு ஸ்விக்கி நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான ராகுல் ஜய்மினி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஸ்விக்கி - சோமேட்டோ
ஒருபக்கம் ஸ்விக்கி நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான சோமேட்டோ ஐபிஓ வெளியிடத் தயாராகி வரும் நிலையில், ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து உயரதிகாரிகள் வெளியேறி வருகின்றனர்.