கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் மழையின் நடுவே குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி நபர் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
இந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்விக்கி நிறுவனம் இருந்ததாக கூறப்பட்டது. மேலும் இந்த நபரை கண்டுபிடிக்க உதவி செய்யும் நெட்டிசன்களுக்கு 5000 ரூபாய் பரிசு வழங்குவதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் குதிரையில் சென்ற அந்த நபரை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி டெலிவரிமேன்
மும்பையில் மழை நேரத்தில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபர் யார் என்பதை தற்போது கண்டுபிடித்து விட்டதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.
தேடும் பணி
இதுகுறித்த தகவல் ஸ்விக்கி நிர்வாகத்துக்கு தெரிய வந்ததும் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால் பெரும் முயற்சி செய்தும் அந்த நபர் யார் என்று தெரியவில்லை.
ரூ.5000 பரிசு
இதனை அடுத்து ஸ்விக்கி நிறுவனம் அந்த நபரை கண்டுபிடிக்க நெட்டிசன்களின் உதவியை நாடியது. மும்பை மழை நேரத்தில் குதிரையில் சென்று டெலிவரி செய்த நபர் யார் என்று கண்டுபிடிக்க உதவும் நெட்டிசன்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தது. இதனை அடுத்து நெட்டிசன்களும் அந்த நபரை தேடி வந்தனர்.
கண்டுபிடிப்பு
இந்த நிலையில் தற்போது ஸ்விக்கி நிறுவனம் இறுதியாக அந்த நபரை அடையாளம் கண்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. மும்பையில் குதிரையில் சென்ற இளைஞன் மற்றும் குதிரை ஆகிய இரண்டையும் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்றும் ஆனால் இதில் விசேஷம் என்னவெனில் அந்த நபர் ஸ்விக்கி நிறுவனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறியுள்ளது.
17 வயது இளைஞர்
குதிரையில் சென்ற நபர் தன்னுடைய நண்பரிடம் டெலிவரி பேக்கை கடன் வாங்கி உள்ளார் என்றும் கடன் வாங்கியதை திருப்பித் தராமல் இருந்ததால்தான் இந்த குழப்பம் வந்ததாகவும் ஸ்விக்கி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த நபரின் பெயர் சுஷாந்த் என்றும் அவர் 17 வயது உடைய இளைஞர் என்றும் அவர் தனது அறையில் தங்கியிருந்த ஸ்விக்கி நிறுவன ஊழியரிடம் சில பொருட்களை கடன் வாங்கி உள்ளார் என்றும் அதில் ஒன்று டெலிவரி பேக் என்றும் அதனை அவர் திருப்பி தராமல் அதை தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தியதை அடுத்தே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பரிசு
இதனையடுத்து இதுகுறித்த வீடியோவை முதன் முதலாக இணையதளத்தில் பதிவு செய்து வைரலாக்கிய நபருக்கு ஸ்விக்கி நிறுவனம் ரூ.5000 பரிசளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.