கடந்த மார்ச் 2020-ல் தான், இந்தியா முழுக்க கொரோனா வவைரஸ் பரவாமல் இருக்க, கொஞ்சம் கடுமையான லாக் டவுன்களை எல்லாம் மத்திய அரசு அறிவித்தது.
இதன் விளைவாக, தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாமல், பல்வேறு ஸ்டார்ட் அப் கம்பெனிகள், தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அதில் இந்தியாவின் உணவு டெலிவரி கம்பெனிகளில் ஒன்றான ஸ்விக்கி நிறுவனமும் ஒன்று. தற்போது மேலும் ஊழியர்களை லே ஆஃப் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
லே ஆஃப் முதல் கட்டம்
கடந்த மே 2020-ல் ஸ்விக்கி நிறுவனம், இந்தியா முழுமைக்கும் இருக்கும் பல்வேறு அலுவலகங்களில் இருந்து, சுமாராக 1,100 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினார்கள். ஸ்டார்ட் அப் கம்பெனிகள் என்றால் இது போன்ற சவால்கள், திடீர் வேலை இழப்புகள் எல்லாம் இருக்கத் தானே செய்யும்? என ஒரு மாதிரி கடந்தார்கள்.
மீண்டும் லே ஆஃப்
ஆனால் இப்போது மீண்டும் 350 ஊழியர்களை, இந்த உணவு டெலிவரி கம்பெனி லே ஆஃப் செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். கொரோனா லாக் டவுனுக்குப் பின், வியாபாரம் 50 சதவிகிதம் தான் தேறி இருக்கிறதாம். எனவே மீண்டும் 350 பேரை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ஸ்விக்கி.
லே ஆஃப் தொடருமா
இந்த இரண்டாவது லே ஆஃப்-க்குப் பின் எந்த ஒரு லே ஆஃப்-ம் இருக்காது எனச் சொல்லி இருக்கிறது ஸ்விக்கி நிறுவனம். தற்போது வேலையில் இருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம், டிசம்பர் 2020 வரை ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற நஷ்ட ஈடுகளும் சலுகைகளும் வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்விக்கி.
113 மில்லியன் டாலர் ஃபண்டிங்
இந்த பிப்ரவரி 2020-ல் தான், ஸ்விக்கி கம்பெனி, 113 மில்லியன் டாலர் தொகையை ஃபண்டிங் வழியாகத் திரட்டியது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவின் இணைய தாதாவான நாஸ்பர்ஸ் (Naspers) தான் ஸ்விக்கி கம்பெனியில் 40.56 % பங்குகளை வைத்திருக்கிறது. இந்த 113 மில்லியன் டாலர் ஃபண்டிங்குக்குப் பிறகு, ஸ்விக்கி கம்பெனியின் மதிப்பு 3.6 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம்.