கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
செலவுகளை குறைக்கும் வகையிலும் பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாகவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் என்ற வங்கி சுமார் 5,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிரெடிட் சூயிஸ்
சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் என்ற வங்கி செலவை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த வங்கியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5000 ஊழியர்கள் பணிநீக்கம்?
2022ஆம் ஆண்டில் கிரெடிட் சூயிஸ் வங்கி நஷ்டம் ஏற்படுவதை தடுப்பதற்காக பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பணி நீக்கம் தொடர்பான நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் 3000 முதல் 5000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
செலவு குறைப்பு
ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கை உள்பட பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக 15.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கிரெடிட் சூயிஸ் வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
புதிய சி.இ.ஓ
கிரெடிட் சூயிஸ் வங்கியின் புதிய சி.இ.ஓ ஆக 52 வயதான உல்ரிச் கோர்னர் என்பவர் பதவியேற்ற பின்னர் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட செலவுகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் கிரெடிட் சூயிஸ் வங்கி பல்வேறு இழப்புகளை சந்தித்தது என்பதும் குறிப்பாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற வழக்கின் காரணமாக சட்ட செலவுகள் மட்டும் 1.59 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவு செய்யப்பட்டது என்றும் இது அந்த வங்கிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கிரெடிட் சூயிஸ் வங்கிக்கு 2.1 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து கிரெடிட் சூயிஸ் வங்கி மேல்முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.