சிம்பொனி பிராண்டு 90 கிட்ஸ்-க்கு மறக்க முடியாத பிராண்டுகளில் ஒன்று, சிம்பொனி நிறுவனத்தின் ஏர்கூலர் பெரு நகரங்களில் இருந்து சிறிய கிராமம் வரையில் வாடிக்கையாளர்களை வைத்திருந்தது. இன்றும் பல வீடுகளில், அலுவலகங்களில் சிம்பொனி பிராண்ட் ஏர் கூலர்களைப் பார்க்க முடியும்.
இந்நிலையில் சிம்பொனி நிறுவனம் தற்போது வர்த்தகத்தைப் பல வகையில் விரிவாக்கம் செய்துவரும் நிலையில், சிம்பொனி நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான அச்சல் பேக்கரி மும்பையில் மிகப்பெரிய வீட்டை வாங்கியுள்ளார்.
மும்பை
இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமான மும்பையில் கொரோனா தொற்று முடிந்த பின்பு ஆடம்பர மற்றும் விலை உயர்ந்த வீடுகளின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. விராட் கோலி துவங்கி டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் வரையில் பலரும் புதிய வீடுகளை வாங்கியுள்ளனர்.
அச்சல் பேக்கரி
அந்த வகையில் சிம்பொனி நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான அச்சல் பேக்கரி தனது குடும்ப டிரஸ்ட் அமைப்பான அச்சல் பேக்கரி குடும்ப டிரஸ்ட், அச்சல் அனில் பேக்கரி, ரூபா அச்சல் பேக்கரி ஆகியோர் இணைந்து மும்பையில் 72.85 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கியுள்ளனர்.
ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்
இப்புதிய வீடு மும்பை வோர்லி பகுதியில் அமைந்துள்ள ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்-ல் அமைந்துள்ளது. சுமார் 7762 சதுரடி-யில் 4 கார் பார்க்கிங் உடன் அமைந்துள்ள இந்த ஆடம்பர அப்பார்ட்மென்ட்-ஐ Oasis Realty நிறுவனத்திடம் இருந்து அச்சல் பேக்கரி குடும்பம் வாங்கியுள்ளது. பத்திர கட்டணமாக மட்டுமே 4.37 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.
Ritz-Carlton ஹோட்டல்
ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் ஆடம்பர அப்பார்ட்மென்ட் கட்டிடத்தில் 4BHK, 5BHK வீடுகள் இரண்டு டவர்களில் அமைந்துள்ளது. இதில் ஒரு டவரில் Ritz-Carlton ஹோட்டல் உள்ளது, மற்றொரு டவரில் ஆடம்பர வீடுகள் உள்ளது. இந்த வீட்டின் உயரம் 350 மீட்டர் என்பதால் இதன் பெயரை ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் என்ற பெயரை பெற்றுள்ளது.
734 கோடி ரூபாய் வருமானம்
செப்டம்பர் மாதம் மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 வருடத்தில் பார்த்திராத வகையில் சுமார் வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 8,628 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இதன் மூலம் அம்மாநில அரசு 734 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.