எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் விற்பனையிலும் மாபெரும் வெற்றியை அடைந்துள்ள டெஸ்லா நிறுவனம் உலகளவில் உருவாகி வரும் வர்த்தகத்தைப் பூர்த்திச் செய்யும் வகையில் கார்களின் உற்பத்தியை வேகப்படுத்தவும், அதிகரிக்கவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் மிகப்பெரிய ஒப்பந்தத்தைத் தைவான் நாட்டின் பெகாட்ரன் கைப்பற்றியுள்ளது. இத்திட்டத்திற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் EL Paso நகரில் புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது பெகாட்ரன்.
சீன ராணுவம் உத்தரவு
சமீபத்தில் சீன ராணுவம் டெஸ்லா கார்களை ராணுவ பகுதிகள் மற்றும் ராணுவ குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் டெஸ்லா கார் செல்ல தடை விதித்தது. சீன ராணுவம் டெஸ்லா கார்களில் இருக்கும் கேமராக்களில் பாதுகாப்புக் குறித்த தரவுகள் திரட்டக் கூடும் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டெஸ்லா முடிவு
இதன் பின்பு தான் டெஸ்லா தனது உதிரி பாகங்களைத் தயாரிக்கப் புதிய தொழிற்சாலையை அமெரிக்காவிலேயே அமைக்கத் திட்டமிட்டது. இதற்காகத் தைவான் நாட்டின் முன்னணி உற்பத்தி நிறுவனமான பெகாட்ரன்-ஐ தேர்வு செய்துள்ளது.
இதனால் டெஸ்லா சீனாவில் இருந்து வெளியேறத் திட்டமிடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
டெஸ்லாவும் சீனாவும்
டெஸ்லா நிறுவனத்திற்கு அமெரிக்காவைப் போலவே சீனாவும் மிக முக்கியச் சந்தையாக விளங்குகிறது. 2020ல் டெஸ்லா விற்பனை செய்த மொத்த எல்கட்ரிக் கார்களில் 30 சதவீதம் சீனாவில் மட்டும் விற்பனை செய்துள்ளது. மேலும் சீனாவில் ஒவ்வொரு காலாண்டுக்கும் டெஸ்லாவின் விற்பனை அதிகரித்து வருகிறது.
பெகாட்ரன் - ஆப்பிள் கூட்டணி
பெகாட்ரன் இதற்கு முன் ஆப்பிள் நிறுவனத்திற்கான கருவிகளைச் சீனா, இந்தியா, தைவான் நாடுகளில் இருக்கும் தொழிற்சாலைகளில் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது டெஸ்லா உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
டெஸ்லா பங்கு மதிப்பு
இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 நாட்களில் 677 டாலரில் இருந்து 780 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் கூட 0.96 சதவீதம் வளர்ச்சி உடன் துவங்கி 762.32 டாலரில் இருந்து 780.79 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 740.62 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.