பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது, இதன் ஒரு பகுதியாக மாத சம்பளக்காரர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி-க்கான (ஈபிஎஃப்) அளவீட்டை குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதன் மூலம் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் உயரவில்லை என்றால் வீட்டுக்கு அதாவது டேக் ஹோம் சேலரியில் (Take Home Salary) கணிசமான உயர்வு ஏற்படும்.
ஆனால் அது ஓய்வு பெறும் போது கிடைக்கும் பணத்தின் அளவில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோஷியல் செக்யூரிட்டி கோட்
நாடாளுமன்றத்தில் இந்த வாரம் சமூகப் பாதுகாப்பு குறியீடு மசோதா 2019 (Social Security Code bill 2019) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் முக்கிய அம்சமாக ஊழியர்கள் தங்களது பிஎப் திட்டத்திற்காகப் பிடிக்கப்படும் பணத்தை அளவில் 12 சதவீத அளவில் இருந்து குறைத்துக்கொள்ள முடியும். தற்போது வகைப்படுத்தப்பட்ட அதாவது Organised துறையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் 12 சதவீத அடிப்படை சம்பளத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி-க்காகக் கொடுக்க வேண்டும்.
நடைமுறை அமைப்பு
தற்போது வகைப்படுத்தப்பட்ட துறையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து தலா 12 சதவீத தொகையை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி-க்காகச் செலுத்தப்படுகிறது.
இது சில முக்கியத் துறைகள் அதாவது MSME, டெக்ஸ்டைல், ஸ்டாடர்அ போன்ற பல துறைகளில் இந்த 12 சதவீத விதிகளுக்குத் தளர்வு உண்டு.
புதிய விதிகள்
தற்போது கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் மூலம் EPFO திட்டத்திற்கான நிதி அளவீடுகள் 9 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையில் மாறுபடும். மேலும் இது துறை சார்ந்தும் மாறுபடும். இந்த விதி தளர்வுகள் மூலம் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் கையில் பெறும் சம்பளத்தின் அளவு உயரும் என இதுகுறித்து அறிந்த இத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
3000 கோடி ரூபாய்
இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிகளவிலான பணப் புழக்கம் ஏற்படும் இது பொருளாதார வளர்ச்சியைக் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. EPFO அமைப்பு ஒவ்வொரு வருடமும் 1.3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஊழியர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது.
தற்போது அறிவித்துள்ள 3 சதவீத தளர்வின் மூலம் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் நிதிச் சந்தையில் புழக்கத்திற்காக வரும். இந்த நிதி 6 வருடச் சரிவில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என மத்திய அரசு நம்புகிறது.