பணத் தேவை ஏற்படும்போது உடனே நண்பர்களிடம் கேட்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஃப்ரெண்ட் தானே எப்போது வேண்டுமானாலும் பணத்தை வாங்கிக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறோம்.. ஆனால் உண்மையிலேயே உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நீங்கள் வாங்கும் கடனுக்கும் வருமான வரி உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் செய்யும் மறைமுக பரிவர்த்தனையையும் வருமானவரித் துறையினர் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி நீங்கள் உங்கள் நண்பரிடம் இருந்து கடனாக ரூ.20,000 அல்லது அதற்கு மேல் பெறக்கூடாது. இது குறித்து நிதி நிபுணரான சித்தார்த் மவுரியா ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.
"உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் என யாராக இருந்தாலும் அவர்களிடம் ரூ.20,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பெறக்கூடாது. இதை மீறினால் எவ்வளவு தொகை வாங்கி இருக்கிறீர்களோ அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும். உதாரணமாக நீங்கள் அவசரத்திற்காக உங்கள் நண்பரிடம் ரூ.1 லட்சம் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வருமானவரித்துறைக்கு இந்த விஷயம் தெரிய வரும்போது உங்களுக்கு விதிக்கப்படும் அபராதமும் ரூ.1 லட்சமாக இருக்கும். வாங்கிய கடனை நீங்களே திருப்பிக் கொடுத்து விட்டாலும் இதே தண்டனை தான்".
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். வருமானவரித்துறைக்கு எப்படி நம் வீட்டிற்குள் நடப்பது தெரியும்? என்று.. நமக்கெல்லாம் 2 கண்கள் தான் இருக்கிறது. ஆனால் வருமான வரித்துறைக்கு 57 கண்கள். 57-க்கும் மேற்பட்ட வழிகளில் வருமானவரித்துறையினர் உங்களை கண்காணித்து வருகின்றனர். உலகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விழும் பணம் குறிப்பிட்ட எல்லையை மீறும் போது வங்கிகள் கண்டிப்பாக உங்களைப் பற்றிய விபரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவித்து விடும்.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒரு தொழிலதிபராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தொடர்ந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் அவருடைய கணக்கில், நான் இந்த நபருக்கு ரூ.1 லட்சம் கடன் கொடுத்திருக்கிறேன் என்று கணக்கு காட்டுவார். அவர் அப்படி கணக்கு காட்டும் பட்சத்தில் வருமான வரித்துறையின் கம்ப்யூட்டர் சிஸ்டம் உங்கள் கணக்கையும் சரிபார்க்கும்.
எனவே வருமான வரி சட்டத்தின் பிரிவு 269SS-இன் கீழ் ஒரே ஒரு பரிவர்த்தனையாக ரூ.20,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பெற்றாலோ அல்லது ஏற்கனவே 10,000 ரூபாய் வாங்கி மீண்டும் ரூ.20,000 கடன் பெற்று மொத்த கடன் தொகை ரூ.20,000த்தை தாண்டினாலோ வருமான வரித் துறை உங்களை கண்காணிக்கும். இதிலிருந்து தப்பிப்பதற்கு செக், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ வசதிகள் அல்லது வங்கிகள் மூலமாக பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
சிக்குவது கடன் வாங்கியவர் மட்டுமா?: பணம் வாங்கியவருக்கு தான் வரி பிரச்சினை என்று நினைத்து விடாதீர்கள். பணம் கொடுத்தவர்களுக்கும் இது பிரச்சனை தான். விதிமுறையை மீறி கடன் கொடுத்தவர் வாங்கியவர் என இருவருமே வருமான வரித்துறையின் விசாரணைக்குள் வருவார்கள். கடன் வாங்கியவரிடம் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் கடன் கொடுத்தவரிடம் உங்களுடைய பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்கள் கேட்கப்படலாம்.
சரி ரொக்க பரிவர்த்தனை செய்வதற்கு தான் ரூ.2 லட்சம் வரை லிமிட் இருக்கிறதே.. அப்புறம் எதற்கு இந்த ரூ.20,000 லிமிட் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. கடன் என்று வரும்போது ரூ.20,000 அல்லது ரூ.20,000-த்திற்கும் அதிகமாக பணம் வாங்கினால், அதை கண்டிப்பாக வங்கிகளின் மூலமாகத்தான் பெற வேண்டும். அப்படி இல்லாமல் ரொக்கமாக பெற்றால் அது சட்டப்படி குற்றம்.
அதுவே நீங்கள் ஒரு வியாபாரி.. சொந்தமாக கடை வைத்திருக்கிறீர்கள்.. அப்போது உங்களிடம் வரும் வாடிக்கையாளர் தங்கள் வீட்டு விசேஷத்திற்காக ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பொருட்களை வாங்குகிறார். அப்போது உங்களிடம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை ரொக்கமாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால் ரூ.2 லட்சம் மட்டுமே லிமிட். அதைத் தாண்டி பொருட்கள் வாங்கும்போது அவரும் உங்களுடைய அக்கவுண்டுக்கு தான் அனுப்ப வேண்டும்.
வருமான வரித்துறை உங்களுடைய சம்பளம், வாடகை, டிவிடெண்ட், வருமான வரி ரீஃபண்ட், வட்டி வருமானம், சேமிப்பு கணக்குகளில் நடக்கும் பரிவர்த்தனை, டெபாசிட் விவரங்கள், நீங்கள் பெரும் பிஎஃப், பத்திரங்களிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் வருமானம், இன்சூரன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், நிலம் கட்டிட விற்பனை, டெபிட் கார்டு பரிவர்த்தனை என எத்தனையோ வழிகளில் உங்களை கண்காணிக்கிறது. எனவே அனைத்தையும் சட்டப்படி செய்தால் பிரச்சனையே இருக்காது.


Click it and Unblock the Notifications