ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கா தனது ராணுவத்தைத் திரும்பப் பெற்ற காரணத்தால் தாலிபான்கள் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் படையை வீழ்த்தி ஆகஸ்ட் 15ஆம் தேதி மொத்த ஆப்கானிஸ்தான் நாட்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் கண்ணீர் வடித்து வரும் நிலையில், மறுபுறம் ஆப்கானிஸ்தான் உடன் வர்த்தகம் செய்து வந்த பல இந்திய வர்த்தகர்கள் தற்போது பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தாலிபான் போட்ட முட்டுக்கட்டை
தாலிபான்கள் ஏற்கனவே இந்தியாவிற்கு வரும் பல வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில் இந்தியாவில் பல முக்கியப் பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆடை வர்த்தகர்கள் தற்போது புதிதாக ஒரு பிரச்சனையைத் தாலிபான்கள் கைபற்றிய ஆப்கானிஸ்தான் மூலம் எதிர்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இந்திய முதலீடுகள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 15 வருடமாக இந்திய அரசும், இந்திய வர்த்தகர்களும் பல்வேறு முதலீடுகளையும் வர்த்தகத்தையும் செய்து வரும் நிலையில், தாலிபான்கள் அமெரிக்கா உடன் செய்த பேச்சுவார்த்தையின் மூலம் அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டுத் தாலிபான்கள் கைப்பற்றிய காரணத்தால் இந்திய வியாபாரிகள் மத்தியிலான வர்த்தகம் மற்றும் இந்திய முதலீடுகள் அப்படியே நின்று போய் உள்ளது.
4,000 கோடி ரூபாய் நிலுவை
இதனால் சூரத் பகுதியில் இருக்கும் டெக்ஸ்டைல் வியாபாரிகள் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிலான பேமெண்ட் மொத்தமாகத் தடை பெற்று உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்திய டெக்டைல் வியாபாரிகள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி கைப்பற்றல்
ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றிய சில மணிநேரத்தில் ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியையும் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் புதிய உத்தரவை அறிவித்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் நிறுவன கணக்குகளில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு எவ்விதமான பணப் பரிமாற்றத்தையும் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பணப் பரிமாற்றங்களும் ஆப்கானிஸ்தான் நாட்டில் முடங்கியுள்ளது.
சூரத் டெக்ஸ்டைல் வர்த்தகர்கள்
இதுகுறித்து சூரத் டெக்ஸ்டைல் வர்த்தகர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் கூறுகையில் சாம்பலால் போத்ரா கூறுகையில், சூரத்தில் இருந்து ஆடை மற்றும் துணிகளை முதலில் துபாயில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பி வந்தோம், அதன் பின்பு மொத்த இந்திய வர்த்தகர்களும் பங்களாதேஷ் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்குத் துணி மற்றும் ஆடைகளை அனுப்பி வந்தோம்.
ஏற்றுமதி மொத்தமாக நிறுத்தம்
தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாகக் கைப்பற்றியுள்ள நிலையில் ஏற்றுமதிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே நிலுவையில் உள்ள சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிலான பேமெண்ட் தொகையைத் திரும்பப் பெறுவோமா என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மத்தியில் நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் இரு நாடுகளும் தீவிரமாக இருந்த காரணத்தால் உணவு பொருட்கள் முதல் பலவும் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதில் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய வர்த்தகப் பொருளாக இருந்தது டெக்ஸ்டைல்.
டெக்ஸ்டைல் ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து டர்பன் கட்ட பயன்படுத்தப்படும் பட்டு துணி, துணி வகைகள் மற்றும் ரெடிமேட் ஆடை பிரிவில் ஸ்கார்ஃப், ஆடைகள், கஃப்தான் ஆகியவை தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பல முக்கியமான உணவுப் பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
FIEO அமைப்பு அறிவுரை
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நிலுவையில் இருக்கும் 4,000 கோடி ரூபாய் அளவிலான டெக்ஸ்டைல் பேமெண்ட் குறித்து இந்திய அரசின் ஏற்றுமதி அமைப்பான FIEO அமைப்பிடம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இரு நாடுகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களை அடுத்த நடவடிக்கை எடுக்கும் முன்பு காத்திருந்து முடிவுகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
ஆப்கான் நாணய மதிப்பு
கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ஆப்கான் நாணயத்தின் மதிப்பு 80 ஆப்கானியில் இருந்து 87 ஆப்கானிக்கு குறைந்துள்ளது. இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் மத்தியில் கூடுதலான பிரச்சனையாக வெடித்துள்ளது.
டாலர் பரிமாற்றம்
மேலும் மத்திய வங்கியில் இருந்து டாலர் பரிமாற்றம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால் இரு நாட்டு வர்த்தகர்களால் எவ்விதமான டாலர் பரிமாற்றமும் செய்ய முடியாமல் உள்ளது.
சூரத் - டெக்ஸ்டைல் ஹப்
இந்தியாவின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஹப் ஆக விளங்கும் சூரத் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைச் செய்கிறது. சூரத்தில் மட்டும் சுமார் 380 டெக்ஸ்டைல் மில், 6,50,000 லூம், 65,000 வர்த்தகர்கள், 1,00,000 எம்பிராய்டரி யூனிட் எனச் சுமார் 11 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.