தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இந்தியாவை எதிர்பார்க்கக் கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. ஏற்கனவே ஆட்சியை தக்க வைக்க முயலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, இழந்த ஆட்சியை பிடிக்க விரும்பும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி என இரு பழம்பெரும் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் மோதுகின்றன. இந்த சூழலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அதேபோல விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
நான்கு முனை போட்டி இந்த தேர்தலை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றி இருக்கிறது. இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை உண்டாக்குமா என்று எதிர்பார்ப்பு தான் அனைவரிடமும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் தான் இரு பெரும் அரசியல் ஆளுமைகளாக திகழ்ந்து வந்தனர். அவர்களின் மறைவை அடுத்து தமிழ்நாடு சந்திக்கக்கூடிய இரண்டாவது சட்டப்பேரவை தேர்தல் இது.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடத்தப்பட்டது அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 234 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது. 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைப்பது அதுவே முதல் முறை. 2016 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா அதே ஆண்டில் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என அடுத்தடுத்து முதல்வர் பதவி மாறியது. அதன் பின்னர் அதிமுக கட்சிக்குள்ளேயும் பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டன.

இந்த சூழலில் ஜெயலலிதாவும் , கருணாநிதியும் மறைந்த பின்னர் முதன் முறையாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுகவின் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. அதுவும் அதிமுகவுக்கு வெறும் 66 இடங்கள்தான் கிடைத்தன. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது.
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை திமுகவுக்கு வட மாவட்டங்களும் காவிரி டெல்டா மாவட்டங்களும் தான் பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தன. குறிப்பாக சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் 64 தொகுதி திமுகவுக்கு கிடைத்தது. திமுக அருதி பெரும்பான்மை பெறுவதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருந்தது.

அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். அவரது தமிழக வெற்றி கழகம் இந்த முறை 233 தொகுதிகளிலும் களம் காண்கிறது. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
வியாழன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, மே நான்காம் தேதி முடிவுகள் வெளியாகும். இந்த தேர்தலில் மொத்தம் 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள் இவர்களில் 2.77 கோடி பேர் ஆண்கள், 2.89 கோடி பேர் பெண்கள். இந்த தேர்தலில் முதன்முறை வாக்காளர்கள் 35 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் எடுக்க போகும் முடிவு தான் தமிழ்நாடு அரசியலில் புதிய கணக்கை தொடங்க உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசியலில் முக்கியமான நாளாக ஏப்ரல் 23 மற்றும் மே 4 ஆகிய தேதிகள் மாற உள்ளன.


Click it and Unblock the Notifications

