தமிழ்நாட்டில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் தேர்தலில் தங்களுடைய வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.
தமிழ்நாட்டில் இந்த முறை சட்டமன்ற தேர்தல் நான்கு முனை போட்டி கொண்டதாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக - காங்கிரஸ் கூட்டணி , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலையிலான தலைமையிலான அதிமுக - பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி , விஜய்- இன் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவியது.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கட்கிழமை அதாவது மே நான்காம் தேதி அன்று எண்ணப்பட இருக்கின்றன. முதன்முறையாக இந்த தேர்தலில் விஜய் நேரடியாகவே களம் காண்பதால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாக இருக்கின்றன.
தேர்தல் முடிவுகளுக்கான ஒரு முன்னோட்டமாக இவை பார்க்கப்படுகின்றன. கடந்த தேர்தல்களில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் எப்படி இருந்தன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா , கருணாநிதி போன்ற பெரிய ஆளுமைகள் யாரும் இல்லாமல் நடைபெற்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஸ்டாலினுக்கும் நேரடி போட்டி இருந்தது.
இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி 160 லிருந்து 180 இடங்கள் வரையிலும் அதிமுக 35 முதல் 70 இடங்கள் வரையிலும் வெல்லும் என கணிக்கப்பட்டது. தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும் திமுக தனித்து 133 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் அதிமுக மட்டும் 66 இடங்களிலும் வெற்றி பெற்றது.
2016ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் உயிருடன் இருந்தனர். அந்த தேர்தலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி 120லிருந்து 140 இடங்கள் வரை வெற்றி பெறும் என சொல்லப்பட்டது. அதிமுக கூட்டணி 85 லிருந்து 120 இடங்களில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் சற்றே மாறாக அமைந்திருந்தன. அந்த தேர்தலில் அதிமுக தனித்தே 136 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 98 இடங்களிலும் திமுக தனித்து 89 இடங்களிலும் வென்றது.
எனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளும் தேர்தல் முடிவுகளும் சில தேர்தல்களில் அப்படியே நடந்துள்ளது, சில தேர்தல்களில் சற்றே மாற்றத்துடன் இருந்துள்ளது. எனவே இந்த முறை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் உண்மையான தேர்தல் முடிவுகளோடு ஒத்துப்போகுமா இல்லையா என்பது வரும் திங்கள் அன்று தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications

