தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் யாராலும் சரியாக கணிக்க முடியாத ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது விஜய். தமிழ்நாட்டு மக்களை பொருத்தவரை காலம் காலமாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு தான் மாறி மாறி தங்களை ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கி வந்தனர்.
நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். தொடக்கத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அடுத்ததாக நடிகர் சீமான் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். சீமான் கட்சியும் படிப்படியாக வளர்ந்து வருகிறது. ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் பின்னர் அந்த முடிவினை கைவிட்டார். கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால் அதில் அவர் அவ்வளவு தீவிரமாக ஈடுபடவில்லை.

இந்த சூழலில் தான் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் முறையாக தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் தானே நேரடியாக களம் காண்பதோடு மட்டுமல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தினார். விஜய் பொறுத்த வரை முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் அவருக்கு சாதகமாக விழுந்திருக்கலாம் என்றும் திமுக எதிர்ப்பு மனநிலை வாக்குகள் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு செல்லாமல் விஜயின் தமிழக வெற்றிக் கழகக் கட்சிக்கு சென்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
விஜய் என்ற ஒரு காரணி தான் தேர்தல் முடிவுகளை எந்த கருத்துக்கணிப்புகளாலும் தீர்க்கமாக கூற முடியவில்லை என சொல்லப்படுகிறது. பெரும்பாலான தேர்தல் கருத்துக்கணிப்புகளை நான் சராசரியாக கணக்கிட்டு பார்க்கும்போது திமுகவிற்கு 120 இடங்கள் அதிமுக கூட்டணிக்கு 70 இடங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20க்கும் அதிகமான இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவே கூறுகின்றன.
மொத்தத்தில் இந்த தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் ஒரு சக்தியாக மட்டுமில்லாமல் பல்வேறு தொகுதிகளிலும் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான ஒரு சூழலை தமிழக வெற்றி கழகம் உருவாக்கி இருப்பதாகவே சொல்லப்படுகிறது. விஜய் 2024ஆம் ஆண்டு தான் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே பல காலமாகவே தன்னுடைய ரசிகர் மன்றம் மூலமாக படிப்படியாக அரசியல் பணிகளை தொடங்கி விட்டார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு அவர் ரசிகர் மன்றத்தினர் அரசியல் கட்சிக்கான அடிப்படைகளை தொடங்கினார். அதுதான் இந்த தேர்தலில் அவருக்கு கை கொடுத்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். விஜய் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது ஒரு புதிய முகமாக தன்னை நிலை நிறுத்துவது ஆகியவை இளைஞர்கள் மத்தியில் ஒரு வித வரவேற்பை ஏற்படுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்கள் எளிதில் கணிக்க கூடிய ஒன்றாக இருக்கும். ஆனால் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு காரணி இந்த முறை அதை தடுத்து இருக்கிறது. ஒரு வேளை எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகும் போது கூட்டணி கணக்குகள் மாறினால் விஜய் கிங் மேக்கராக உருவாகலாம். விஜய் இந்த முறை கிங் மேக்கராக உருவாகவில்லை என்றால் கூட அவருடைய தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
பல்வேறு தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவ போவது நிச்சயம், எனவே அதிமுக திமுக என்ற இரண்டு கூட்டணிகளின் கணக்குகளையும் சிக்கலாக கூடிய ஒரு நபராக விஜய் இருக்கப் போகிறார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் விஜயை தமிழ்நாடு அரசியலில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications

