தமிழ்நாட்டில் முதல் முறையாக விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதிலும் கூடுதலான சிறப்பு என்ன வென்றால் சுதந்திர தினத்திற்கு முன்பு தாக்கல் செய்யப்படுவது தான்.
இதுமட்டும் அல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்து 100ஆவது நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுப் பட்ஜெட் அறிக்கையைப் போலவே இந்த விவசாயப் பட்ஜெட் அறிக்கையும் டிஜிட்டல் பட்ஜெட் அதாவது இ-பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
பொதுப் பட்ஜெட் அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிலையில், வேளாண் துறைக்கான பட்ஜெட் அறிக்கையை இத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.
விவசாயிகள் பிரச்சனை
இந்தப் பட்ஜெட் மூலம் விவசாயிகளின் அனைத்துப் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டாலும், அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் ஒரு துவக்கப் புள்ளியாக அமையும் என்பதில் எவ்விதமான மாற்று கருத்தும் இல்லை. இதேவேளையில் விவசாயத் துறைக்கான பட்ஜெட் என்பது நல்ல முயற்சி என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்த நம்பிக்கையைப் பட்ஜெட் அறிக்கை காப்பாற்றுமா..?
3வது மாநிலம் தமிழ்நாடு
கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்கள் இதற்கு முன்பு வேளாண் துறைக்கான தனிப் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து மூன்றாவது மாநிலமாகத் தமிழ்நாடு இன்று வேளாண் துறைக்கான தனிப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
புதிய வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும் மத்திய வேளாண் சட்டங்களை ஒருபோதும் திமுக அரசு ஏற்காது என்றும் ஏற்கனவே வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகை
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,200 கோடி தொகை நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அரசு உறுதியான அறிவிப்பை வெளியிட உள்ளது.
வேளாண் ஏற்றுமதிக்குப் பயிற்சி
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேளாண் ஏற்றுமதி தொடர்பாகப் பயிற்சி வழங்கும் திட்டம் இந்தப் பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகலாம்.
கரும்பு சாகுபடியில் வெட்டுக்கூலி , கூலியாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளதால் கரும்பு அறுவடையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும்.
உழவா் சந்தை விரிவாக்கம்
உழவா் சந்தைகளை மீண்டும் ஊக்குவிக்கவும் அதிகப்படுத்தவும் ஸ்டாலின் தலைமையிலான அரசு விரும்புகிறது. விவசாயிகள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியுள்ளார்.
100 நாள் வேலை திட்டம்
பொதுபட்ஜெட் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் சம்பளமும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100 நாட்கள் திட்டத்தில் 50 சதவீதத்தை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த விவசாயிகளின் கோரிக்கை இந்த வேளாண் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படுமா..?
புதிய விவசாயக் கல்லூரி
பொதுப் பட்ஜெட் அறிக்கையில் சித்த மருத்துவத்திற்குப் புதிய கல்லூரிகள் துவங்க உள்ளதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக வேளாண் கல்லூரிகளை உருவாக்க வெளியாகுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
விலை நிர்ணயம்
கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுமா என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபத்தையும் வருமானத்தையும் பெறுவார்கள்.
பிற முக்கியத் துறைகள்
கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறைக்கு முக்கியத் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வேளாண் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற முக்கியத் திட்டங்கள்
இதோடு விவசாய மானியம், பயிர்க்காப்பீடு திட்டம், இயற்கை வேளாண்மை திட்டம், பாரம்பரிய விதை சேமிப்பு ஆகியவற்றைக் குறித்தும் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.