தமிழக இடைக்கால பட்ஜெட்டினை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தான் ஒரு விவசாயி என்று அடிக்கடி கூறி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு, விவசாயத் துறைக்கு முக்கிய அறிவிப்புகளை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல்வேறு நிதி ஒதுக்கீடு, மானியம் மற்றும் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விவசாயத் துறைக்கு ஒதுக்கீடு
பயிர்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வேளாண் துறைக்கு 11,982 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்பாசனத்திற்கு 6,453 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி விவசாய பயிர்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
விவசாயத் துறைக்கு கவனம
தொடர்ந்து விவசாய துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், இன்று அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
குடிமராமத்து மற்றும் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டங்கள் மூலம் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண் தொழில் செழிக்க நுண்ணீர்ப் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப் பண்ணையம், வேளாண் விற்பணை மையங்கள் மேம்பாடு, பயிர் காப்பீட்டுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கால் நடைகளுக்கு நடமாடும் அவசர வாகன சேவை
விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கால்நடைத் துறையின் பங்கும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தான் கால் நடைகளுக்கு நடமாடும் அம்மா அவசர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் நிவாரண தொகை
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரேவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, மழை காரணமாகவும் பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இயற்கை பேரிடர் 1 ஹெக்டேருக்கான நிவாரண தொகை 13,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவர் மரணமடைந்தால் நிதியுதவி
55.67 லட்சம் ஏழை குடும்பங்களில் குடும்பத் தலைவர் மரணமடைந்தால் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதுதவிர இன்னும் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம். இதனை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.