கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த மத்திய அரசு வீடு மற்றும் கட்டுமான திட்டங்களில் அதிகளவிலான முக்கியதுவம் அளித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசும் கிட்டத்தட்ட இதேபோன்ற கட்டுமான திட்டங்களுக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு கட்டுமான திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில், இத்துறையில் கூடுதல் வர்த்தகத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 3 முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வீட்டு வசதி திட்டம்
11வது முறையாக இன்று தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு சுமார் 3,700 தோடி ரூபாய் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாட்டில் வீட்டு கட்டுவோர் அல்லது வாங்குவோருக்கு முறையாக நிதி சலுகை அளிக்கப்படும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதி முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் 2வது கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் தமிழக அரசு கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6,683 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நெடுஞ்சாலை துறை
இதேபோல் தமிழ்நாட்டில் சேலம் - சென்னை நெடுஞ்சாலை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள்
இந்த திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் வர்த்தகம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவை மேம்படும்.