சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு மீது தனி கவனமா? எப்படி டீல் செய்ய போகிறார் நிர்மலா சீதாராமன்?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என பிரத்தியேக திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2025 பட்ஜெட்டில், முக்கியமான அரசியல் களமாக கருதப்படும் பீகார் மாநிலத்திற்கு ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் வாரி வழங்கப்பட்டன. இது தேர்தலில் வெற்றி பெற பாஜக கூட்டணிக்கு உதவியது.

அதேபோல், கடந்த ஆண்டு டெல்லி தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியது. தேசிய தலைநகர் மண்டலத்தின் (NCR) இணைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், தலைநகரில் வீட்டு வசதி பற்றாக்குறையை சமாளிக்க பிரதமர் ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டமும் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டது.

தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு மீது தனி கவனமா? எப்படி டீல் செய்ய போகிறார் நிர்மலா சீதாராமன்?

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு தனி கவனம் கிடைக்குமா என பலரும் ஆவலோடு இருக்கின்றனர். இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பிரத்தியேகமான திட்டங்கள் வருமா, சிறப்பு ஒதுக்கீடுகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஏனெனில் இது தேர்தல் பரப்புரைகளில் முக்கிய பங்காற்ற போகிறது.ஏற்கனவே ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசு "நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்" காட்டுகிறது என்ற கருத்தை முன்னிறுத்தி வருகிறது.

திமுக செய்தித் தொடர்பாளர் தரணிதரன் எக்கனாமிக்ஸ் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில், "தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுக்கிறது, ஆனால் எங்களுக்கு 29 பைசா மட்டுமே திரும்பி வருகிறது. அதேசமயம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சுமார் மூன்று ரூபாய் பெறுகின்றன. மேலும், துறைசார்ந்த திட்டங்களுக்காக அவர்களுக்கு கூடுதலாக ரூ.4.5 ரூபாய் கிடைக்கிறது" என்று குறிப்பிடுகிறார்.

மத்திய அரசு மாநிலத்தின் நிதியை திட்டமிட்டு முடக்குகிறது என கூறும் அவர் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.3,500 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார். "சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்காக எங்களுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடி முறையாக இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிதி தொடர்ந்து தாமதமாகிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

'கேலோ இந்தியா’ திட்டத்தை சுட்டிக்காட்டிய திமுக, ஒலிம்பிக் வீரர்களைத் தொடர்ந்து உருவாக்குவதில் தமிழகம் சிறந்து விளங்கினாலும், குஜராத் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த நிதியைப் பெறுவதாக தெரிவிக்கிறார். "குஜராத்திற்கு சுமார் ரூ.400 கோடி கிடைக்கிறது, ஆனால் தமிழகத்திற்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே வருகிறது. ஒலிம்பிக் வீரர்களைத் தொடர்ந்து உருவாக்கும் மாநிலங்களுக்கு கூட இந்த ஏற்றத்தாழ்வான நிதி ஒதுக்கீடு ஒரு பிரச்சினைதான்" என்று தரணிதரன் கூறினார்.

திமுக குற்றச்சாட்டுகளுக்கு பாஜக-அதிமுக கூட்டணி பதிலடி கொடுத்துள்ளது. அண்மைய தேர்தல் பொதுக்கூட்டங்களில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுகவை "நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி" என்று கடுமையாக விமர்சித்தார். மாநில திட்டங்களில் "20% கமிஷன் கலாச்சாரம்" நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக அரசை "நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு" என்று வர்ணித்தார். "20 சதவீத கட் மணி" கலாச்சாரம் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "நிதி நிறுத்திவைப்பு" என்ற திமுகவின் வாதம், அவர்களின் சொந்த நிதி நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்கான ஒரு புகைத்திரை என பாஜக வாதிடுகிறது.

சி.ஆர்.கேசவன் போன்ற பாஜக தலைவர்கள், தமிழகத்தின் அதிகரித்து வரும் கடன் சுமையைக் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தின் கடன் ரூ.9.3 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், இதனால் தமிழ்நாடு நாட்டிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் இதே கருத்துக்களை எதிரொலிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு "கடைசி தேர்தல்" என்று பழனிசாமி சமீபத்தில் கூறியுள்ளார். ஆளும் கட்சி 2021 தேர்தல் வாக்குறுதிகளில் கால் பகுதியைக் கூட நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு பல ஆண்டுகளாக நிதிப் பகிர்வை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த நிதி மாநில நிர்வாக இயந்திரத்தால் "முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று இக்கூட்டணி தொடர்ந்து வாதிடுகிறது.

மறுபுறம், 2026 பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, தமிழகத்திற்கு புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் அரசியல் சூழலை மாற்ற மத்திய அரசு முயற்சித்துள்ளது. ஜனவரி தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து ரூ.15,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் சிலவற்றைத் தொடங்கி வைத்தார். இது திமுகவின் "புறக்கணிப்பு" பிரச்சாரத்திற்கு எதிரான ஒரு "வியூக ரீதியான பதிலடி" என்று பலர் கருதுகின்றனர்.

தென்னிந்தியாவில் "விக்சித் பாரத்" திட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையை (ECR) விரிவுபடுத்துவதற்காக ரூ.5,000 கோடி சிறப்பு தொகுப்பை அறிவித்தது. ஆனால் நிலுவையில் உள்ள கல்வித் திட்ட நிதிகளை விடுவிப்பதற்கும், "ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு" செய்வதற்கும் மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் தர வேண்டும் என திமுக தரப்பு கோருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+