முதலமைச்சர் விஜய் ஜூன் 22ஆம் தேதியான நாளைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த ஆண்டு பிறந்தநாள் விஜய்க்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் விஜய் முதலமைச்சர் பதவியில் தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்த விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என பெயர் சூட்டினார். இதனை அடுத்து விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2ஆவது மாநாட்டையும் நடத்தினார். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளை கொள்கை தலைவர்களாக அறிவித்தார்.

ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது விஜய்யின் தவெக. பல்வேறு விமர்சனங்களையும் கடந்து தவெக கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே சட்டசபை பொதுதேர்தலை விசில் சின்னத்துடன் எதிர்கொண்டது. பெரும்பாலான மக்கள் விஜய் என்ற ஒற்றை ஆளை நம்பி தங்களின் வேட்பாளரின் முகம் கூட தெரியாது ஆனால் விஜயை நம்பி வாக்களிக்கிறோம் என விசில் சின்னத்திற்கு வாக்களித்து விஜயை முதலமைச்சர் அரியணையில் ஏற வைத்துவிட்டனர்.
தற்போது நடிகர் என்பதை தாண்டி தமிழக முதலமைச்சர் விஜய் என அனைவரும் அவரை குறிப்பிட தொடங்கியுள்ளனர். ஆட்சி பொறுப்பேற்று, ஒரு மாதத்தை நிறைவு செய்து இருக்கும் முதலமைச்சர் விஜய் தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை, நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதலமைச்சராக தனது 'முதல்' பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் நாளை அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூறுவார்கள். இந்நிலையில் முதலமைச்சராக பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சட்டசபையில் நாளை புதிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக இந்த தேர்தலில் தவெக பெண்களை மையமாக கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை தந்தது. மாண்புமிகு மகளிர் திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவி தொகை, திருமணத்தின் போது அண்ணன் சீர் என்ற பெயரில் பட்டுபுடவை மற்றும் ஒரு சவரன் தங்கம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரை பவுன் மோதிரம், பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என வாக்குறுதிகளை தந்தார்.
தன்னுடைய பிறந்தநாளில் முதலமைச்சர் விஜய் இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தான் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு மாநில அரசுக்கு பல லட்சம் கடன் இருப்பதை அறிவித்தது. இந்நிலையில் புதிய திட்டங்களை உடனே அறிவிக்காமல் குறிப்பிட்ட தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியையாவது விஜய் நாளைய தினம் அறிவிப்பார் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

