தமிழ்நாட்டில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 8,70,643 மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள். இவர்களில் 94.31% பேர் அதாவது 8,21,150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போலவே இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,19,891 மாணவிகளும் 4,01,214 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 4.32% அதிகமாக இருக்கிறது. அதே வேளையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.51 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10,476 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அடுத்ததாக சமூக அறிவியல் பாடத்தில் 3336 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3194 மாணவர்களும் ஆங்கிலத்தில் 92 மாணவர்களும் தமிழில் 34 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அந்த வகையில் அதிகமான மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த பாடமாக அறிவியல் முதலிடத்திலும், தமிழ் கடைசி இடத்திலும் உள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது. தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக இருக்கிறது. இங்கே 86.58% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11ஆம் வகுப்பில் சேர மதிப்பெண் சான்றிதழை வரும் 22 ஆம் தேதியிலிருந்து பெறலாம். தற்போதைக்கு ஆன்லைனில் இருந்தும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் 26 இல் இருந்து ஜூன் 9ம் தேதி வரை மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

