முதலமைச்சர் விஜய் குடும்ப தலைவிகள் மிகவும் எதிர்பார்த்த இலவச சிலிண்டர்கள் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில், வெளியிட்டார். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது.
காலையில் அவை கூடிய உடன் முதலமைச்சர் விஜய் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இலவச சிலிண்டர் திட்டம் குறித்தும் அது எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்பது குறித்தும் அவர் அறிவித்தார். தற்போது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் வாங்க மாதம் தோறும் ஒவ்வொரு குடும்பமும் தலா 1000 ரூபாயை செலவிட வேண்டி இருக்கிறது. ஈரான் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு சிலிண்டர் விலையும் உயர்ந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது விஜய்-இன் தவெக சார்பாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டன. குறிப்பாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இலவசமாக 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விஜய் தலைமையிலான அரசு அமைந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்ற புகார் இருந்தது.
இந்நிலையில் தான் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தார்.
எனவே வரும் 2027ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக கிடைக்க போகின்றன. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் இந்த இலவச சிலிண்டர் கிடைக்காது. இதற்கான சில தகுதிகளை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி ஓராண்டுக்கு 2 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் 3 இலவச சிலிண்டர்கள் கிடைக்கும்.
அதாவது உங்கள் குடும்ப வருமானம் ஓராண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் மட்டுமே நீங்கள் 3 இலவச சிலிண்டர்களை பெற முடியும். இந்த திட்டத்தில் நாம் சிலிண்டர் எடுத்த பிறகு அந்த சிலிண்டருக்கான தொகையை அரசே சம்பந்தப்பட்ட குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் 1.3 கோடி குடும்பங்கள் பலனடைய உள்ளன. அரசுக்கு இதனால் 4000 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும். சிறு, குறு வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் சேர பொதுமக்கள் விண்ணப்பம் எதுவும் செய்ய தேவை இருக்காது. ஏனெனில் அரசே நேரடியாக சிலிண்டர் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை பெற்று பயனாளிகளை தேர்வு செய்யும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்களிடம் நம்முடைய ஆதார் உள்பட அனைத்து தகவல்களும் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க சிலிண்டர் எடுத்த பிறகு தான் பணம் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. உண்மையான பயனாளிகளை இந்த திட்டம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அரசு இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications

