தமிழ்நாடு இந்தியாவிலேயே தொழில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஒரு மாநிலம். கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டது. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தொழில்துறை முதலீடுகள் தான்.
வழக்கமாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியில் இருப்பவர்களும், தொழில் துறை அமைச்சர் பதவியில் இருப்பவர்களும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து அங்கே இருக்கும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுப்பார்கள். முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி போன்றோர் தங்கள் ஆட்சி காலத்தில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜயும் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாகவே தென் மாநிலங்களில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது, இந்த வாரம் தைவானில் செமிகண்டக்டர், ஏ.ஐ., சிப் உள்ளிட்ட தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள, பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும், செமிகான் மாநாடு நடக்கிறது.
இந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு, தைவானுக்கு செல்கிறது. வரும் 4ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று இவர்கள் தொழில் நிறுவன தலைவர்களை சந்திக்க உள்ளனர்.
இதனை அடுத்து முதலமைச்சர் விஜய், தொழில் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர், வரும் 10ஆம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளனர். அக்குழுவினர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், 16ஆம் தேதி வரை சுற்று பயணம் செய்து, அந்நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்.
ஏற்கனவே விஜய் அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தது உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வராமல் நின்று போய்விட்டன, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் விஜய் அரசு மீது எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்படுகின்றன.
இந்த சூழலில் தான் முதலமைச்சர் விஜய் பிரிட்டன் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்த மே மாதம், தவெக அரசு பொறுப்பேற்றது. அதன் பின், முதல் முறையாக அமைச்சர் கீர்த்தனா, தென்கொரியா சென்று, கப்பல் கட்டும் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் இரண்டாவதாக தைவானுக்கு செல்கிறார். முதல்வராக பொறுப்பேற்ற பின், விஜய் முதல் முறையாக வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

