முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் புதிய நடைமுறையை கொண்டு வருவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் முக்கிய உணவு ஆதாரமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் உள்ளன.
அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாகவும் மானிய விலையிலும் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த பொருட்கள் தான் பல்வேறு மக்களின் அன்றாட வயிற்றுப் பசியை போக்கி வருகின்றன. ஆனால் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் அவ்வப்போது குற்றம் சாட்டிய வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக பொருட்களின் எடை குறைவு , கலப்படம் , கடத்தல், கள்ள சந்தையில் விற்பனை ஆகிய புகார்கள் முன் வைக்கப்படுகின்றன.

குறிப்பாக ரேஷன் கடைகளில் வாங்க கூடிய பொருட்கள் சரியான எடையில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே முன்வைக்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை என்றால் நம் வீட்டில் வந்து எடை பார்க்கும்போது அதன் அளவு 800 கிராம் வரைக்கும் தான் இருக்கிறது. அதேபோல ரேஷன் பொருட்களில் கலப்படம் நடக்கிறது. ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே நீடிக்கின்றன. இந்த புகார்களுக்கு தீர்வு காணும் வகையிலும் பொதுமக்களுக்கு தரமாகவும் சரியான அளவிலும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய கூடிய வகையிலும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட இருக்கிறது.
தற்போது கிடங்குகளில் இருந்து மூட்டைகளில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன ரேஷன் கடைகளில் அந்த பொருட்களை இயந்திரத்தில் வைத்து அளவிட்டு நமக்கு விநியோகம் செய்கிறார்கள். இந்த முறை தற்போது முழுமையாக மாற்றப்படுகிறது. அதாவது அரசு கிடங்குகளிலேயே இனி நவீன இயந்திரங்கள் மூலம் துல்லியமாக ரேஷன் பொருட்கள் எடை போடப்பட்டு முத்திரையிடப்பட்டு பாக்கெட்டுகளாக மாற்றப்படும். ரேஷன் கடைக்கு வரும்போது ஒரு கிலோ சர்க்கரை, 5 கிலோ அரிசி ,ஒரு கிலோ பருப்பு என பாக்கெட்டுகளிலேயே கொண்டுவரப்பட்டு விடும். இதனால் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வரும்போது கடை ஊழியர்கள் அந்த ஒரு பாக்கெட்டை எடுத்து வழங்கினாலே போதும். இந்த நடைமுறையில் ரேஷன் பொருட்களின் தரம் உறுதி செய்யப்படும். சரியான எடை இருப்பதும் உறுதி செய்யப்படும்.
கிடங்குகளில் இருந்து கொண்டுவரும் வழியில் ரேஷன் பொருட்களில் கலப்படம் நடப்பது ரேஷன் பொருட்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவது உள்ளிட்டவற்றை தடுக்க முடியும். விஜய் தன்னுடைய தேர்தல் பரப்புரையின் போதே ரேஷன் பொருட்கள் சரியான எடைக்கு அளவிடப்பட்டு பாக்கெட்டுகளில் வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதனை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தமிழ்நாடு அரசு தீவிரப் படுத்தி இருக்கிறது.
அண்மையில் கூட உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் வெங்கட்ராமன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இது நடைமுறைக்கு வரும் போது பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் ஒவ்வொரு பாக்கெட்டிலும் அரசு முத்திரை ,பேட்ச் நம்பர் மற்றும் அதன் எடை விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும் என்பதால் அவை கடத்தப்படுவது வெளிச்சந்தையில் விற்கப்படுவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போது நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக எடை போடுவதற்கான நேரம் மிச்சமாகும். பொதுமக்கள் வந்த உடனேயே அந்த பாக்கெட்டை எடுத்து விநியோகம் செய்தாலே போதும் முதல் கட்டமாக சில மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டத்தை தொடங்கி பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இன்று விஜய் தலைமையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications

